மியான்மர் நாட்டில் அகதிகளாக தப்பிவந்த படகு கவிழ்ந்து விபத்து... 12 ரோஹிங்கியாக்கள் பலி
மியான்மர் நாட்டிலிருந்து அகதிகளாக வங்கதேசத்துக்கு படகு மூலம் தப்பி வந்த போது படகு கவிழ்ந்து 12 ரோஹிங்கியாக்கள் உயிரிழந்துவிட்டனர். இன்னும் ஏராளமானோரை காணவில்லை.
டாக்கா: மியான்மர் நாட்டிலிருந்து அகதிகளாக வங்கதேசத்துக்கு தப்பி வந்தபோது
ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் 12 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களில் சிலர் இந்தியாவுக்கும் தப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மியான்மர்- வங்கதேச எல்லையில் நஃப் ஆற்றில் படகு மூலம் தப்பி வருகின்றனர். அவ்வாறு அங்குள்ள படகில் 100-க்கும் மேற்பட்டோர் ஏறி தப்பி வந்தனர். அப்போது பாரம் தாங்க முடியாமல் ஆற்றின் முகத்துவாரத்தின் அருகே படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நேற்றிரவு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 12 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.
அந்த 12 பேரில் 10 குழந்தைகள், ஒரு ஆண் மற்றும் ஒரு வயதான பெண் ஆகியோர் ஆவர். இன்னும் ஏராளமானோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.