சட்டவிரோதமாக அபார்ஷன்... அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை
வாஷிங்டன்: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காகாக இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் பூர்வி பட்டேல் (33). இந்திய வம்சாவளியை சேர்ந்த பூர்வி, கடந்த 2013ம் ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், அக்கர்ப்பத்தை வளர்க்க விரும்பாத பூர்வி, அதனைக் கலைத்து விட முடிவு செய்தார்.
இன்டியானா மாகாணத்தில் கர்ப்பத்தை கலைப்பது சட்ட விரோதமாகும். எனவே, கருக்கலைப்பிற்கு மருத்துவமனைக்கு செல்லாத பூர்வி, ஹாங்காங்கில் இருந்து இணையதளம் மூலம் கருக்கலைப்பு மருந்துகளை ஆர்டர் செய்து வரவழைத்தார்.
பின்னர் அம்மருந்துகளை சாப்பிட்டு தனது கருவை அவர் கலைத்த பூர்வி, அந்த சிசுவை ஒரு பையில் அடைத்து குப்பை தொட்டியில் வீசி விட்டார். தகுந்த மருத்துவ ஆலோசனை பெறாது தானாகவே கருக்கலைப்பு செய்து கொண்ட பூர்விக்கு ரத்தப்போக்கு காரணமாக கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார். ஆனால், அப்போதும் அவர் தான் கருக்கலைப்பு செய்த விசயத்தை மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே குப்பை தொட்டியில் வீசிய கருவை போலீசார் கண்டெடுத்தனர். அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பூர்வி தான் இதை செய்தார் என்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து பூர்வி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் பூர்விக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.