சொந்த மண்ணிலேயே அடிமைகளாய் தவிக்கும் 6.5 கோடி இந்தியர்கள்
நியூயார்க்: சொந்த நாட்டிலேயே 6.5 கோடி இந்தியர்கள் அடிமைகளாக வேலை செய்கின்றனர் என்ற செய்தியை அமெரிக்க ஆய்வு வெளியிட்டுள்ளது.
120 கோடி மக்களை கொண்ட நமது நாட்டில் 6.5 கோடி இந்தியர்கள் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உலகெங்கிலும் வாழும் மக்களின் நிலை மற்றும் வேலைக்காக நடைபெற்று வரும் ஆள் கடத்தல் போன்றவற்றை கண்காணித்து வரும் அமெரிக்க அரசின் "டிப்ஸ்" வெளியிட்டுள்ள 2013 ஆம் ஆண்டறிக்கையின்படி நமது நாட்டில் மட்டும் சுமார் ஆறரை கோடி மக்கள் வறுமை, குடும்பக் கடன் போன்ற காரணங்களினால் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாகவும், சிலர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
வசதியான தரகர்களின் மூலமாக உள்நாட்டில் இந்த ஆள் கடத்தல் ரகசியமாக நடைபெற்று வருவதாக குறிப்பிடும் அந்த அறிக்கை, இப்படி கடத்தப்படும் ஆண்- பெண் இருபாலர்களும் கட்டுமான வேலை, ஜவுளித் தொழில், மீன் மற்றும் இறால் பதப்படுத்துதல், செங்கல் சூளை, சுரங்கங்கள் மற்றும் ஓட்டல் வேலைகளில் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.