மலேசியா: 70 ஆண்டுக்கு முன் விபத்துக்குள்ளான யு.எஸ். விமான பயணிகளின் உடல்கள் மீட்பு
கோலாலம்பூர்: இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் சிங்கப்பூரில் இருந்து ராணுவ விமானத்தில் மலேசியா சென்ற அமெரிக்க வீரர்கள் 3 பேர் விபத்தில் பலியானார்கள். 70 ஆண்டுகள் கழித்து அவர்களின் எலும்புக்கூடுகள் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில் 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் ராணுவ விமானம் சி-47ல் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவில் உள்ள பெனாங்கிற்கு சென்றனர். அந்த விமானம் மலேசியாவில் மாயமானது. விமானத்தை தேடியும் கிடைக்காததால் அதில் பயணம் செய்த ஜட்ஸன் பாஸ்கட், வில்லியம் மேயர்ஸ் மற்றும் டொனால்ட் ஜோன்ஸ் ஆகியோர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் 1966ம் ஆண்டு மலேசியாவின் மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் அந்த விமானத்தின் பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டும் விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு 1985ம் ஆண்டில் இரண்டு பேர் அந்த விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்தனர். ஆனால் 2009ம் ஆண்டு தான் உள்ளூர் மக்கள் விமானம் விழுந்த இடத்தை புகைப்படம் எடுத்து மலேசியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த விமானத்தின் பாகங்களை மீட்பதில் ஆண்டுக்கணக்கில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் 70 ஆண்டுகள் கழித்து விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டு அதில் பயணம் செய்த 3 பேரின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் எலும்புக்கூடுகள் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீட்கப்பட்டது.
வீரர்களின் எலும்புக்கூடுகள் ராணுவ மரியாதையுடன் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி அந்த எலும்புக்கூடுகள் மறைந்த 3 வீரர்களினுடையது தானா என்பதை உறுதி செய்வார்கள்.