கத்தாரில் அப்துல் கலாம் நினைவாக நடந்த பேச்சுப் போட்டி
தோஹா: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் நினைவாக கத்தார் தமிழர் சங்கம் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்ப் பேச்சுப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
நவம்பர் 6ம் தேதி அன்று ஐடியல் இந்தியன் பள்ளி அரங்கில் நடைபெற்ற பேச்சுப் போட்டியின் இறுதிச் சுற்று நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜான் பெஞ்சமின் சுரேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் கிரீஷ்குமார், தனது உரையில் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக இந்நிகழ்ச்சியை நடத்திய கத்தார் தமிழர் சங்கத்தை பாராட்டினார்.
முதல் சுற்றில் 9 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட 68 மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 மாணவர்கள் இருவேறு தலைப்புகளில் பேசினார்கள் ."ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்களது வெற்றிப் பயணங்கள்" என்ற தலைப்பில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களும், "அப்துல் கலாம் அவர்களது எழுச்சியூட்டும் கனவுகள்-எண்ணங்கள்-செயல்கள்" என்ற தலைப்பில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களும் பேசினர்.
பேச்சாளர்களின் கடும் போட்டியினை இலக்கிய ஆர்வலர்கள், சிறந்த சொல்லாற்றல் மிக்கவர்கள் நடுவர்களாக இருந்து மதிப்பீடு செய்தனர். முதல் பிரிவில் முதலாம் , இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசுகளை முறையே வருண் முகில்(எம்.இ.எஸ்.), பவிஷா(எம்.இ.எஸ்.), விதுலா (பிபிஎஸ்) மற்றும் ஜெப்ரி இம்மானுவேல் (பியர்ல் பள்ளி) ஆகியோர் வென்றனர். இரண்டாம் பிரிவில் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசுகளை முறையே அனீஸ் சட்டநாதன்(எம்.இ.எஸ்.), ஜனனிஸ்ரீ(டிபிஎஸ் எம்ஐஎஸ்), ரிந்தியா (ஐஐஎஸ்) மற்றும் அபர்ணா பிரேமா பரணி(ஐஐஎஸ்) ஆகியோர் வென்றனர்.
சங்கத்தின் தலைவர் கே.வி கோபாலகிருஷ்ணன், டெய்சீர் மோட்டார்ஸ் ஆனந்த், தோஹா வங்கி சுந்தரேசன் மற்றும் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும், நடுவர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயம், நினைவுப்பரிசுகள் ஆகியவற்றை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மனித நேயம் மிக்க அப்துல் சலாம் அவர்கள் அவரது சேவைக்காக கௌரவிக்கப்பட்டார். இங்கு எதிர்பாராவிதமாக இறந்தவர்களின் உடல்களை சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து விதமான சட்ட நடைமுறை உதவிகளை செய்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான உடல்களை ஊருக்கு அனுப்ப உதவி செய்திருக்கிறார்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வரும் அப்துல் சலாம் அவர்களை கத்தார் தமிழர் சங்கத்தின் தலைவர் கே.வி. கோபாலகிருஷ்ணன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்து, பாராட்டிப் பேசினார். அண்மையில் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மீரான் என்பவர் பொருளாதார சூழ்நிலை காரணமாக 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஊருக்கே செல்லாமல் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலை ஊருக்கு அனுப்பவும், அவர் குடும்பத்திற்கு உதவவும் கத்தார் தமிழர் சங்கம் செய்த பங்களிப்புக்கான ரசீதும், அவர் முன்னின்று செய்த பங்களிப்புக்கான ரசீதும் ஒப்படைக்கப்பட்டன.
நிகழ்ச்சி நடைபெற ஒத்துழைத்த மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் இலக்கியச் செயலாளர் நாராயணன் நன்றி கூறினார் .
கத்தார் தமிழர் சங்க உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு வருடாந்திர ஆதரவாளர்களாக டெய்சீர் மோட்டார்ஸ், தோஹா வங்கி, ஆர்.எஸ்.என். குழுமம், பிரிட்டானியா மற்றும் பலர் ஆதரவு அளித்திருந்தனர் .