ஓராண்டைக் கடந்த தாலிபான்கள் ஆட்சி.. இப்படியெல்லாம் கட்டுப்பட முடியாது.. கொந்தளிக்கும் பெண்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஓராண்டை கடந்து தாலிபான்கள் ஆட்சி நடந்துவரும் நிலையில், தொடர்ந்து நாங்கள் கட்டுப்பட முடியாது, எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று அந்நாட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அரசு ஆட்சி நடத்தியது.
ஆனால், தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த தாலிபான்கள், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தனை முழுமையாக கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தாலிபான்கள் ரொம்ப மோசம்! இரவில் தூக்கமின்றி தவிப்போம்! ஆப்கானிஸ்தான் பற்றி விவரித்த சீக்கிய பெண்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய மக்கள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரம் முழுமையாக தாலிபான்கள் வசம் வந்தது. கடுமையான பழமைவாத சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறினர். குறிப்பாக பலர் விமானங்களில் தொங்கியபடி கூட்டம் கூட்டமாக பயணித்த காட்சிகளையும் தொலைக்காட்சி வழியாக உலக நாடுகள் பார்த்தன. எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலம் போல் தற்போதைய ஆட்சி இருக்காது என தாலிபான்கள் கூறினர். உலக நாடுகளும் இதையேதான் தாலிபான்களிடம் வற்புறுத்தி வந்தன.
பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
முதலில் இதையெல்லாம் செய்வதாக ஒப்புக்கொண்டிருந்த தாலிபான்கள், நாள் போக போக தங்கள் பழமைவாத கொள்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கினர். குறிப்பாக தாலிபான்கள் அமைச்சரவையில் ஒரு பெண்களுக்கு கூட பிரதிநிதித்துவம் அளிக்காதது சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்தன. ஆனாலும் இதற்கெல்லாம் சற்றும் தளராத தாலிபான்கள், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கினர்.
ஆண் துணையின்றி செல்லக்கூட்டாது
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புர்கா அணிய வேண்டும். வேலைகளுக்கு செல்லக்கூடாது. டூவீலர் ஓட்டக்கூடாது. ஓட்டலில் ஆண், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது, 70 கி.மீட்டருக்கு மேலான தொலை தூர பயணங்களுக்கு ஆண் துணையின்றி செல்லக்கூட்டாது, பெண்களுக்கான இடைநிலைக்கல்வி நிலையங்களை மூடியது என அடுக்கடுக்கான நடவடிக்கைகளை தாலிபான் அரசு எடுத்தது. இதனை உலக நாடுகள் கண்டித்தாலும் கூட தாலிபான்கள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து விதவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
பெண்களுக்கான உரிமை
ஆனாலும், தாலிபான்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பெண்களுக்கான உரிமைகளை கிடைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார் மொனேசா முபரேஸ் . 31 வயதான இவர் ஆப்கானிஸ்தானில் நிதி அமைச்சகத்தில் கொள்கை கண்காணிப்பு இயக்குநராக பணியாற்றினார். தாலிபான் ஆட்சிக்கு பிறகு பின்பற்றிய பழமைவாத கொள்கைகளால் வேலை இழந்தாலும் தொடர்ந்து பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதில் விடாப்பிடியாய் இருக்கிறார். தலைநகர் காபூலில் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களின் முதன்மையாக இருக்கும் மொனேசா முபரேஸ், இதற்காக தலைநகர் காபூலில் பல்வேறு கட்ட ஆலோசனைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இறுதி மூச்சு இருக்கும் வரை குரல் கொடுப்பேன்
தாலிபான்களின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சகம் துறை நீக்கப்பட்டு இருக்கும் நிலையில், மொனேசா முபேரஸ் இது பற்றி கூறுகையில், ''ஆப்கானிஸ்தானில் ஒரு உள்நாட்டு போர் முடிந்து விட்டது. ஆனால், பெண்களுக்கான சரியான உரிமையை நிலைநாட்டுவதற்கான உரிமை மீட்பு போராட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்" என்றார்.
உரிமையை மீட்பதே எங்களின் முதன்மை நோக்கம்
துவக்கத்தில் தாலிபான்களின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் பொதுவெளியில் தங்கள் போராட்டத்தை மொனேசா முபேரஸ் முன்னெடுத்தார். ஆனால், மே மாதத்திற்கு பிறகு இத்தகைய போராட்டங்கள் அங்கு வெளிப்படையாக நடக்கவில்லை. ஆனாலும் மெனசோ உள்பட பெண் உரிமைக்காக போராடும் பெண்கள் பலரும் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் வீடுகள் போன்ற இடங்களில் ஆலோசனையை நடத்தி வருகின்றனர். நாங்கள் எந்த நாட்டின் உளவாளியும் இல்லை, கைப்பாவைகளும் இல்லை, இழந்த எங்கள் உரிமையை மீட்பதே எங்களின் முதன்மை நோக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தாலிபான்களின் விதியை மீறும் செயல்
ஆப்கானிஸ்தானுக்கான ஐநா பிரநிதிதியான அலைசன் டேவிடியன் இது பற்றி கூறும் போது, ''மெனேசா போன்று பல பெண்களுக்கு ஆப்கானிஸ்தான் முழுவதும் இதுபோன்ற நெருக்கடிகள் உள்ளன. தங்கள் வீட்டின் முன்வாசல் வழியாக வெளியில் வருவது உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், ஆப்கானிஸ்தானில் இது சாதாரணம் ஆனது அல்ல.. இது தாலிபான்களின் விதியை மீறும் செயலாக இருக்கும்" என்றார்.