மாநிறம்.. கருகரு கூந்தல்.. 7500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘கால்பியா’ இப்படித்தான் இருந்திருப்பார்!
கற்காலத்தில் வாழ்ந்த பெண்ணின் உருவத்தை மிகத் துல்லியமாக உருவாக்கியுள்ளனர் ஜிப்ரல்டார் ஆராய்ச்சியாளர்கள்.
ஜிப்ரல்டார்: சுமார் 7500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் உருவம் இப்படித்தான் இருந்திருக்கும் என மிகத் துல்லியமாக உருவாக்கி அசத்தியுள்ளனர் ஜிப்ரல்டார் ஆராய்ச்சியாளர்கள்.
மனிதன் எப்போது தோன்றினான்... அவன் எப்படி எல்லாம் வாழ்ந்தான்.. அவனது கலாச்சாரம் என்ன... எப்போது விவசாயம் செய்ய ஆரம்பித்தான்... என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னமும் தெளிவான விடையைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனித எச்சங்களையும், அவன் பயன்படுத்திய கருவிகளையும் தேடிப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் கிடைத்தது தான் 'கால்பியா'வின் மண்டை ஓடு.
கால்பியாவை பற்றி தெரிந்துகொள்ள 7500 ஆண்டுகள் பின்நோக்கி டைம்மெஷின் பயணம் எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை. 24 ஆண்டுகளுக்கு பின்நோக்கினாலே போதும்.
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் 2 வீரர்களுடன் எலியும் பயணம் செய்ததா?.. இணையத்தில் வீடியோவால் அக்கப்போர்!
ஜிப்ரல்டார் குகை
பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட ஒரு சிறிய நாடு ஜிப்ரல்டார். ஸ்பெயின் நாட்டின் அருகே ஐபீரிய குடாநாட்டில் அமைந்துள்ள இந்த குட்டித்தீவு பல வரலாற்று பொக்கிஷங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. அந்த நாட்டின் ஐரோப்பா முனையில் உள்ள ஒரு குகையில் கடந்த 1996ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டனர்.
மண்டை ஓடு
அப்போது அவர்களுக்கு பழங்கால மனிதர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்தன. தொடர்ந்து தோண்டிய போது, பறவை எச்சங்கள், சிக்கிமுக்கி கற்களுக்கு அடியில் ஒரு மண்டை ஓடு போன்றவற்றை கண்டெடுத்தனர் ஆராய்ச்சியாளர்கள். அதை அவர்கள் ஜிப்ரல்டார் அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைத்து, ஆராய்ந்து வந்தனர்.
டிஎன்ஏ பரிசோதனை
சுமார் 23 ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சியின் பயனாக கடந்த 2019ம் ஆண்டு அந்த மண்டை ஓடு பற்றிய பல உண்மைகள் தெரியவந்தன. டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில், அந்த மண்டை ஓட்டுக்கு சொந்தகாரர் சுமார் 7500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அனத்தோலியா வம்சாவழி
ஜிப்ரல்டார் குகையில் புதையுண்டு கிடந்த அந்த பெண்ணின் மண்டை ஓட்டில், 10 சதவீதம் மட்டுமே ஐபீரிய மக்களின் மரபணுவுடன் ஒத்து போகிறது. மீதமுள்ள 90 சதவீத மரபணுக்கள், ஆசிய மக்களின் மரபணுவுடன் பொருந்துகிறது. இதன் மூலம் அந்த பெண், ஆசியாவின் துருக்கி நாட்டை சேர்ந்த அனத்தோலியா வம்சாவழியை சேர்ந்தவராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மான்ஸ் கால்ப்
இதையடுத்து அந்த பெண்ணின் மண்டை ஓட்டுக்கு ஜிப்ரல்டாரின் பழங்கால பெயரான 'மான்ஸ் கால்ப்' எனும் சொல்லை அடிப்படையாக வைத்து 'கால்பியா' என பெயரிட்டுள்ளனர். கால்பியா வாழ்ந்த காலம் 5400 பிசி, அதாவது கற்காலத்தின் இறுதி ஆண்டுகள் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
கடல் வழி பயணம்
ஆராய்ச்சியாளர்களின் முடிவுபடி கால்பியாவும் அவரது இனத்தவர்களும் ஆசியாவில் இருந்து கடல் வழியாக பயணித்து, ஐபீரியாவுக்கு வந்திருக்க வேண்டும். நிச்சயம் தரை வழி பயணம் செய்யவில்லை என ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாக கூறுகிறார்கள். கால்பியாவின் மரபணுவில் வேறு எந்த இனத்தவர்களின் கலப்பும் இல்லை என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
ஐரோப்பாவில் விவசாயம்
அவரது காலத்தில் தான் ஐரோப்பாவில் விவசாயம் மேலோங்க தொடங்கியிருக்கிறது. கால்பியாவின் வம்சாவழியினர் மீன் பிடித்தும், மிருகங்களை வேட்டையாடிச் சாப்பிடும் குழுக்களை சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. மேலும் பால் குடிக்கும் பழக்க வழக்கம் அவர்களது காலத்தில் இருந்திருக்கவில்லை என்பது கால்பியாவின் மண்டை ஓட்டை ஆராய்ச்சி செய்யும் போது தெரியவந்தது.
கால்பியாவின் உருவம்
கால்பியாவின் மண்டை ஓட்டை கணினியில் ஸ்கேன் செய்து, அவருக்கு உருவம் கொடுக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். கால்பியாவின் முகம், மாநிறமாகவும், கண்கள் கருமையாகவும், கூந்தல் கருப்பு நிறத்திலும் இருந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. மேலும் இறக்கும் போது கால்பியாவுக்கு 25 முதல் 40 வயது வரை இருந்திருக்கலாம் என்பதும் அவர்களின் முடிவு.
நிஜ மனிதரைப் போல்
அதை அடிப்படையாக கொண்டு சுமார் 7500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கால்பியாவின் உருவத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சிலிக்கான் பொம்மை மிகத்துல்லியமாக நிஜமான பெண்ணை போலவே இருக்கிறது. வரலாறு பாட புத்தகத்தில் வெறும் ஓவியங்களாகவே பார்த்து வந்த கற்கால மனிதர்களை, கால்பியாவின் மண்டை ஓட்டை வைத்து மனித உருவமாகவே பார்க்க வைத்துள்ள ஆராய்ச்சியாளர்களை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.