பொலிவியாவில் வாழ்ந்த 123 வயது முதியவர் மரணம்
சுக்ரே: பொலிவியாவில் வாழ்ந்த 123 வயது முதியவர் மரணமடைந்தார்.
பொலிவியா நாட்டில் வாழ்ந்த வயது முதிர்ந்த நபர் என்று கருதப்படும் கேர்மெலோ ஃப்லோரஸ், கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார்.
அவரது ஞானஸ்நான சான்றிதழின்படி, கேர்மெலோ ஃப்லோரஸ்சின் பிறந்த தேதி 16-7-1890 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் இல்லை:
பொலிவியா நாட்டில் 1940 ஆம் ஆண்டுக்கு பின்னரே பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்ததால் இவரது வயதை சட்டப்படி நிரூபிக்கும் வேறு எவ்வித சான்றுகளும் இவரிடம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஜமாரா இந்திய வம்சாவளி:
1932-35 ஆம் ஆண்டுகளுக்கிடையே பொலிவியா-பரகுவே நாடுகளுக்கிடையில் நடந்த சாக்கோ போரில் பங்கேற்றதாக கூறிவந்த இவர், பொலிவியாவில் வாழும் ஐமாரா இந்தியர் என்ற வம்சாவழியை சேர்ந்தவர் என தெரிகிறது.
திங்களன்று மரணம்:
டிட்டிக்காக்கா ஏரிக்கரையில் உள்ள லா பெஸ் பகுதியின் குக்கிராமம் ஒன்றில் வசித்து வந்த இவர், சர்க்கரை நோய் பாதிப்பால் கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்ததாக இவரது 70 வயது மகன் தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
கின்னஸ் சாதனை பதிவின்படி, 1997 ஆம் ஆண்டில் மரணமடைந்த ஜீன்னே கால்மெண்ட் என்ற பிரெஞ்சுப் பெண் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் என 122 வயது வரை வாழ்ந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆதாரங்கள் இல்லை:
இந்த நிலையில் தற்போது மரணமடைந்த கேர்மெலோ ஃப்ளோரெஸ் உலகில் அதிக காலம் வசித்த நபரா என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.