டெலிகிராம் செயலிக்கு தடை! பிரேசில் உச்சநீதிமன்றம் அதிரடி! தவறான தகவல் பரப்பியதால் நடவடிக்கை
பிரசிலியா: பிரேசிலில் டெலிகிராம் செல்போன் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறான தகவல்கள் பரப்புவதை கட்டுப்படுத்தாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அக்டோபர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
பிரேசில் நாட்டில் அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சனாரோ. சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் மின்னணு வாக்குப்பதிவு முறையில் மோசடிக்கு வாய்ப்பு உள்ளதாக மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.
இந்நிலையில் தான் பிரேசிலில் வரும் அக்டோபரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ டெலிகிராம் செயலி மூலம் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.

தவறான தகவல்கள்
இவரை டெலிகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். மேலும் "ரீலெக்ட் போல்சனாரோ 2022" என பல குழுக்கள் செயல்படுகின்றன. இதற்கிடையே தேர்தல் நெருங்கும் நிலையில் டெலிகிராமில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் தவறான தகவல்களை பரப்புவதை டெலிகிராம் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.

டெலிகிராம் புறக்கணிப்பு
சமூக வலைதளங்கள் தவறான தகவல்களுக்கு எதிராக போராட வேண்டும் என அந்தநாட்டின் தேர்தல் தீர்ப்பாயம் கூறியது. இதையும் டெலிகிராம் மீறியது. மேலும் தவறான தகவல்கள் பரப்புவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் டுவிட்டர், டிக்டாக், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சார்பில் தீர்ப்பாயத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதை டெலிகிராம் புறக்கணித்தது.

தடை விதிப்பு
இந்நிலையில் தான் டெலிகிராமுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை நீதிபதி அலெ க்ஸ்சாண்ட்ரே டி மோரேஸ் விசாரித்தார். இதில், ‛‛தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை முடக்கவும், நாட்டின் சட்டங்களுக்கு இணங்கவும் நீதித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதை பின்பற்ற டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால் பிரேசிலில் டெலிகிராமுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த தடை தொடரும்'' என உத்தரவிட்டார்.

ஒத்திவைக்க மறுப்பு
இதையடுத்து டெலிகிராம் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் நிறுவனத்தின் அலட்சியத்துக்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். மேலும், தீர்ப்பை சில நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் டெலிகிராம் தடை பிரேசிலில் அமலாகி உள்ளது.

பெரிய மாற்றம்
பிரேசிலில் 53 சதவீதம் பேரின் செல்போனில் டெலிகிராம் பயன்பாட்டில் உள்ளது. இதனால் இந்த உத்தரவு பிரேசிலில் பெரிய அரசியல் மற்றும் தேர்தல் விளைவுகளை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளரும், டிஜிட்டல் தகவல் தொடர்பு நிபுணருமான பாப்லோ ஆர்டெல்லாடோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications