பெண்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுங்க: செசன்யா அதிபர் அறிவுரை
க்ரோஸ்னி: பெண்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுவதுடன் அவர்களை சமூக வலைதளங்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று செசன்யா அதிபர் ரம்ஜான் ஏ காதிரோவ் தெரிவித்துள்ளார்.
செசன்ய அதிபர் ரம்ஜான் ஏ காதிரோவ் அரசு மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் காதிரோவ் கூறுகையில், பெண்களை வீட்டுக்குள் வைத்து பூட்டுங்கள். அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த பெண்களுக்கு அனுமதி அளிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

காதிரோவுக்கு நெருக்கமான மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி முகமது தவ்தோவ் தான் 50 வயதுகளில் இருந்தும் 17 வயது கேதா கொய்லபியேவாவை கடந்த சனிக்கிழமை மணந்துள்ளார். முன்னதாக போலீஸ் அதிகாரி நசுத் குசிகோவ் அந்த பெண்ணின் பெற்றோரிடம் சென்று மே மாதம் 2ம் தேதிக்குள் உங்கள் பெண்ணை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வோம் என்று மிரட்டியதாக செய்திகள் வெளியானது.
இந்த செய்தியை பார்த்த அதிபரோ தான் அந்த சம்பவம் குறித்து விசாரித்ததாகவும் அந்த இளம்பெண்ணும் சரி, அவரது பெற்றோரும் சரி திருமணத்திற்கு சம்மதம் அளித்ததாகவும் தெரிவித்தார். அந்த திருமண விழாவில் காதிரோவ் கலந்து கொண்டு நடனமாடியதுடன் இது தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய திருமணம் என்று தெரிவித்துள்ளார்.
மைனர் பெண்ணை மணந்த போலீஸ் அதிகாரியை கிண்டல் செய்து பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த காதிரோவ் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களை சமூக வலைதளங்களை பயன்படுத்தவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications