உலகின் உயரமான கண்ணாடி பாலத்தை திறந்த வேகத்தில் மூடிய சீனா
பீஜிங்: உலகின் மிக உயரமான கண்ணாடிப் பாலத்தை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாததால் திறந்த 15 நாட்களுக்குள் பாலம் மூடப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் கடந்த மாதம் 20ம் தேதி உலகின் உயரமான,நீளமான கண்ணாடிப்பாலம் திறக்கப்பட்டது. இரண்டு மலைக் குன்றுகளை இணைக்கும்படியான இந்த கட்டமைப்பு, ஹுனான் மாநிலத்தில் ஜான்ஜாஜி பள்ளத்தாக்கிற்கு மேல், சுமார் 300 அடி உயரத்தில் உள்ளது. இந்த பாலம் தியான்மென் மலையின் தேசிய பூங்காவில் உள்ள இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்தவர் ஹாய்ம் டோடன் எனும் இஸ்ரேல் பொறியாளர்.
பார்வையாளர்கள் பள்ளத்தை, 99 மூன்றடுக்கு கண்ணாடி பேனல்கள் வழியாக பார்க்கலாம். ஒரு வண்டி செல்லும் அளவிற்கு பலமானதாக உள்ள இந்த பாலத்தில் பாதசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளில் 8 ஆயிரம் பேர் சென்று வர முடியும்.
கண்ணாடி பாலங்களும், மலைப் பாதைகளும் சீனாவில் மிக பிரபலம். வித்தியாசமான புகைப்படம் எடுப்பதற்கான, குறிப்பாக திருமண புகைப் படங்கள் எடுக்க வாய்ப்புகளை இந்த பாலம் வழங்குகின்றன.
கடந்த மாதம் இருபதாம் தேதி திறக்கப்பட்ட இந்த கண்ணாடிப் பாலம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாவாக மக்கள் வந்து பாலத்தை பார்வையிட்டு சென்றனர். பாலம் திறப்பு விழா நடைபெற்று 13 நாட்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில்,பாலத்தை மூடும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காதவாறு அதிகரித்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 8,000 பேர் மட்டுமே இந்த பாலத்தை பார்வையிட முடியும்.ஆனால் பாலம் திறக்கப்பட்டதிலிருந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு மக்கள் பார்வையிட வருகின்றனர் இதனால்தான் பாலத்தை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாலத்தில் எந்த விரிசலோ,உடைப்புகளோ ஏற்படவில்லை.பாலம் நல்ல நிலையில்தான் உள்ளது.என கண்ணாடிப் பாலத்தின் நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். இதனால் இந்த கண்ணாடிப் பாலத்தை பார்வையிட ஆர்வத்தோடு காத்திருந்த பல பார்வையாளர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.