புனித ஹஜ் யாத்திரைக்கு இனி “நோ கண்டிஷன்”.. கொரோனா ரூல்ஸுக்கு குட்பை! சவூதி அரேபிய அரசு அதிரடி
ரியாத்: இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்றான புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபிய அரசு விதித்து இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது சவூதி அரேபியா. இதன் மூலம் குறிப்பிட்ட வயதினர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் 20 முதல் 30 லட்சம் பேர் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு வருகை தருகிறார்கள்.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக விமான மூலம் சவூதி அரேபியாவுக்கு செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

ஹஜ் யாத்திரை
ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவூதி அரேபியா உட்பட உலகின் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்நாட்டு போக்குவரத்து தொடங்கி வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து வரை அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடு
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஹஜ் யாத்திரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்த சவூதி அரேபியா அரசு, தங்கள் நாட்டை சேர்ந்த 1,000 பேரை மட்டும் யாத்திரை செல்ல அனுமதித்தது.

102 ஆண்டுக்கு பின்
1918 ஆம் ஆண்டு பரவிய புளூ காய்ச்சலின்போது இதுபோல் மிகக்குறைவான அளவில் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 102 ஆண்டுகள் கழித்து மிகக்குறைவான யாத்திரிகர்களுடன் ஹஜ் யாத்திரை நடைபெற்றது. அடுத்த ஆண்டான 2020 ல் சவூதி அரேபியாவில் வசித்து வந்த 60,000 பேருக்கு மட்டும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

10 லட்சம் பேருடன் யாத்திரை
அதேபோல், கடந்த முறை ஹஜ் யாத்திரை நடைபெற்றபோது கொரோனா பரவலின் தாக்கம் மேலும் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து, 10 லட்சம் பேருக்கும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளில் 65 வயதுக்கு அதிகமான முதியோர்கள் ஹஜ் யாத்திரை வர அனுமதி இல்லை என்று கட்டுப்பாடு தொடர்ந்து வந்தது.

சவூதி அமைச்சர் பேட்டி
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரை குறித்து பேசிய, அந்நாட்டு அமைச்சர் ஃபவ்சான் அல் ரபியா, "கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளில் எப்படி ஹஜ் யாத்திரை நடைபெற்றதோ அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும். அதிக எண்ணிக்கையிலான யாத்திரிகர்களுடன் ஹஜ் நடைபெறும்.

கட்டுப்பாடுகளில் தளர்வு
ஹஜ் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்ட வயது வரம்பு ரத்து செய்யப்பட்டு அனைத்து வயதினரும் அனுமதிக்கப்படுவார்கள். உலக நாடுகள் ஹஜ் பயணிகளை அழைத்து வரும் தனியார் பயண நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு அந்த நிறுவனம் மட்டுமே இந்த பணிகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications