தமிழக மாணவர்களுக்கு 2 லட்சத்து 88 ஆயிரம் நிதியுதவி.. டல்லாஸ் தமிழர்கள் நடிகர் சூர்யாவிடம் உறுதி!
டல்லாஸ்(யுஎஸ்): அகரம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக 10 நாட்கள் பயணமாக அமெரிக்கா வந்திருந்த நடிகர் சூர்யா சென்னை திரும்பி விட்டார். அட்லாண்டா, நியூ ஜெர்ஸி, சியாட்டல், சான் ஃப்ரான்சிஸ்கோ நகரங்களில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இறுதியாக டல்லாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் கால்டுவெல் அனைவரையும் வரவேற்றார். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்து இருந்த இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட 75 ஆயிரம் டாலர்கள், அகரம் அறக்கட்டளைக்காக சூர்யாவிடம் வழங்கப்பட்டது.
சூர்யா பேசிய போது "கல்வியால் முன்னேற்றம் அடைந்து அமெரிக்கா வந்துள்ள தமிழர்கள், கல்வியின் வலிமையை நன்றாக உணர்ந்துள்ளார்கள். அமெரிக்காவில் உள்ள தமிழகத்தின் முதல் தலைமுறை பட்டதாரிகளைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி மட்டுமே ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதில் அகரம் அறக்கட்டளை நம்பிக்கை கொண்டுள்ளது.
இது வரையிலும் ஆண்டுக்கு சுமார் 250 மாணவர்களுக்கு நிதியுதவி செய்து பொறியியல், மருத்துவம் உட்பட்ட கல்விக்கு ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே இருப்பதால், அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அமெரிக்கத் தமிழர்களிடம் உதவி கேட்க எண்ணி வந்துள்ளோம்.
இங்கு அனைத்து ஊர்களிலும் தமிழர்கள் அளித்த பேராதரவு பிரமிக்க வைக்கிறது. அகரம் அறக்கட்டளையை, அமெரிக்க சட்டப்படி இங்கு இயங்கும் தன்னார்வ அமைப்பாக பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுத்துள்ளோம். நீங்கள் அளிக்கும் உதவித் தொகை தமிழகத்தின் ஒரு ஏழை மாணவனின் கல்வியையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் என்பதை உறுதியளிக்கிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து 25 நன்கொடையாளர்கள் 30 மாணவர்களின் கல்வித் தொகையை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்கள். நான்கு ஆண்டுகளாக பிரித்து, இந்த தொகை வழங்கப்படும் ஒரு மாணவருக்கு 7ஆயிரத்து 100 டாலர் வீதம் மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரம் டாலர்களுக்கு நிதியுதவி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கம் திரட்டிய 75 ஆயிரம் டாலர்களையும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரம் டாலர்கள் டல்லாஸ் நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்டுள்ளது.
அகரம் அறக்கட்டளையின் செயலாளர் டி.ஜி. ஞானவேல், மாணவர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறினார்.
படிக்காத பெற்றோர்கள், பேருந்து வசதி இல்லாத ஊர் போன்றவைகள் கூடுதல் தகுதிகளாக கருதப்படுவதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியை அகரம் அறக்கட்டளையின் மற்றொரு செயலாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் தொகுத்து வழங்கினார். அகரம் அறக்கட்டளையினால் ஏற்கனவே பயனடைந்தவர்கள் ஸ்கைப் மூலம் நேரடியாக அரங்கத்தில் உள்ளவர்களுடன் உரையாடினார்கள். கேள்வி பதிலும் இடம் பெற்றது.
சூர்யாவின் சூறாவளிப் பயணம், அமெரிக்கத் தமிழர்களிடம் அகரம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றியும், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
- இர தினகர்