”பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே விலங்குகளை கொன்ற விபரீதம்”
கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் நடைபெற்று வரும் வன்கொடுமைகளால் விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
அங்கு உள்ள கோபன்ஹேகன் விலங்கியல் பூங்காவில் கடந்த மாதம் 18 மாத வயதேயான ஒரு ஆரோக்கியமான ஒட்டகச் சிவிங்கியை சுட்டுக் கொன்று அதை சிங்களுக்கு இரையாகப் போட்டனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில் தற்போது ஒரு சிங்கக் குடும்பத்தையே கொலை செய்துள்ளனர். அதாவது 2 சிங்கங்களையும், அதன் இரண்டு குட்டிகளையும் கொன்று விட்டனர்.
அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் இந்தப் படுபாதக செயலைச் செய்துள்ளனர்.
புதிதாக ஒரு சிங்கம் வருவதால் அதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக இதற்கு பதில் கூறுகின்றனர். காரணம், புதிதாக வரும் சிங்கம், இந்த சிங்கங்களைக் கொன்று விடும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்காக இந்த சிங்கங்களைக் கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்ட நான்கு சிங்கங்களுமே வயதானவை அல்ல. அதில் இரண்டு சிங்கங்கள் மட்டுமே வயதானவை. அவையும் கூட சாகும் நிலையிலோ அல்லது மிகவும் வயதான நிலையிலேயோ இல்லை.
நான்கில் இரண்டு சிங்கங்களுக்கு 10 மாத வயதாகிறது. புதிதாக வரும் சிங்கம் இவர்களை விட வலிமையானது என்பதால் வாய்ப்பு கிடைத்தால் இந்த சிங்கங்களை கொன்று விடும் என்பதால் அதைத் தவிர்க்க தாங்களே கொன்று விட்டதாக விலங்கியல் பூங்கா அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தற்போது,இந்நிகழ்வைப் பற்றி விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.விலங்குகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட இடத்திலேயே அவற்றின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம்.