தோஹாவின் “இஸ்தான்புல்” உணவகத்தில் தீவிபத்து - 12 பேர் பலி
தோஹா: அரபு வளைகுடா நாடான கத்தார் தலைநகர் தோஹாவில்நடந்த பயங்கர தீவிபத்தில் 12 பேர் பலியானார்கள்.
தோஹாவில், இஸ்தான்புல் என்ற பிரபலமான உணவகம் உள்ளது. இது அங்குள்ள "லேண்ட் மார்க்" வர்த்தக வளாகத்தின் அருகே உள்ளது.
இஸ்தான்புல் ஹோட்டலில் பெருமளவில் மக்கள் கூடுவார்கள். நேற்றும் இங்கு ஏராமானவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென தீப்பிடித்தது.
பின்னர் தீ மளமள வென ஹோட்டல் முழுவதும் பரவியது. இதனால் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் வெளியே ஓட்டம் பிடித்தனர். அதற்குள் அந்த ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்தது.
இந்த தீ விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஹோட்டலில் பிடித்த தீ வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கும் பரவியது. இதனால் பல கார்கள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதற்கிடையே, கேஸ் டேங்கில் ஏற்பட்ட கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் கத்தாரில் தோஹாவில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வெளிநாட்டினர் 19 பேர் பலியாகினர். அவர்களில் 13 பேர் குழந்தைகள் ஆவர்.