இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் துவங்கியது: விறுவிறு வாக்குப்பதிவு
லண்டன்: 650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.
650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இன்று இரவு 10 மணி வரை நடக்கும் தேர்தலில் சுமார் 5 கோடி மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இன்று இரவே சில தொகுதிகளுக்கான முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் நாளை மதியம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
650 எம்.பி.க்கள் தவிர்த்து பெட்போர்ட், கோப்லாந்து, லீசெஸ்டர், மான்ஸ்பீல்டு, மிடில்ஸ்ப்ரோ மற்றும் டோர்பே ஆகிய இடங்களுக்கான மேயர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
முன்னதாக தபால் மூலம் சிலர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தல் குறித்து இங்கிலாந்து ஊடகங்களில் நேரலை நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.