கெமிக்கல் கிடங்கு.. 15 வருடம் முன் நடந்த பிரதமர் கொலை.. லெபனான் வெடிப்பும் பீதியை கிளப்பும் காரணமும்
பெய்ரூட்: நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி இருக்கும் இந்த வெடிப்பிற்கு பின் இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒரு காரணம் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது!
Recommended Video
லெபனானில் இருக்கும் பெய்ரூட் துறைமுகம் அருகேதான் இந்த வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை வெடிப்பு என்று குறிப்பிட காரணம் உள்ளது. இன்னும் அந்த நாட்டு அரசு இதை வெடி விபத்தா அல்லது வெடிகுண்டு தாக்குதலா என்று உறுதி செய்யவில்லை.
பெய்ரூட் போர்ட் மற்றும் அரசியல் தலைவர்கள் வசிக்கும் மத்திய பெய்ரூட் நகரம் இரண்டுக்கும் இடையில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 70 பேர் இந்த விபத்தில் பலியாகிவிட்டதாக அரசு தரப்பு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
பயங்கர வெடி விபத்தால் சிதைந்த பெய்ரூட் துறைமுகம்- 78 பேர் பலி - 4,000 பேர் படுகாயம்
என்ன நடந்தது
இந்த வெடிப்பில் மொத்தம் 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு இருக்கும் கெமிக்கல் கிடங்கு ஒன்றில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் இரண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது. முதல் வெடிப்பு கிடங்கிற்கு உள்ளே ஏற்பட்டது. இரண்டாவது வெடிப்பு கிடங்கிற்கு வெளியே ஏற்பட்டு உள்ளது. இந்த இரண்டாவது வெடிப்பு 10 கிமீ தூரத்திற்கு சேதத்தையும், 25 கிமீ தூரத்திற்கு அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
காரணம் ஒன்று
இந்த வெடிப்பிற்கு மொத்தம் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. காரணம் 1.. கெமிக்கல் வெடிப்பு. அதாவது விபத்து ஏற்பட்ட கெமிக்கல் கிடங்கில் அதிக அளவில் ஆபத்தான கெமிக்கல்களை வைத்து இருக்கிறார்கள். 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் கெமிக்கல்களை வைத்து உள்ளனர். அதிலும் இதில் கெமிக்கல்களை பராமரிப்பு இன்றி 6 வருடமாக வைத்து உள்ளனர். இதுதான் வெடிப்பிற்கு முதல் காரணம் என்கிறார்கள்.
பிரதமர் என்ன சொன்னார்
அந்நாட்டு பிரதமர் மைக்கல் ஆன், இந்த வெடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் கெமிக்கல்களை ஒரே இடத்தில வைத்து இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை பராமரிக்காமல் விட்டதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும். இதற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
காரணம் 2
இந்த வெடிப்பிற்கு இன்னொரு அரசியல் காரணமும் சொல்லப்படுகிறது, இந்த இரண்டாவது காரணம் பீதியை கிளப்பும் வகையில் இருக்கிறது. 2005ல் முன்னாள் லெபனான் பிரதமர் ரபீக் ஹராரி கொல்லப்பட்டதற்கு இதற்கும் தற்போது முடிச்சுகள் போடப்படுகிறது. லெபனானில் புரட்சியை ஏற்படுத்திய இந்த அரசியல் கொலை, இப்போதும் கூட அந்த நாட்டை விடாமல் துரத்தி வருகிறது.
யார் இந்த ரபீக் ஹராரி
லெபனானை வடிவமைத்தவர் என்று போற்றப்படும் நபர்தான் ரபீக் ஹராரி. போருக்கு பின்பாக 1975-90 வரை இவர்தான் லெபனான் நாட்டின் பிரதமராக இருந்தார். சன்னி - ஷியா மோதல் நிலவும் பிராந்தியத்தில் இவர் சன்னி ஆதரவோடு ஆட்சி அமைத்து வந்தார். இவர் சன்னி முஸ்லீம் என்பதால் ஷியாவை சேர்ந்த ஈரான், சிரியா ஆகிய நாடுகள் இவரை கடுமையாக எதிர்த்தது. அதோடு லெபனான் அரசியலில் தலையிட்டு, அங்கு இவரின் ஆட்சியையும் கவிழ்த்தது.
பிரதமர்
அங்கு நடந்த சன்னி - ஷியா மோதல் உலக நாடுகளுக்கு இடையிலான மோதலாக மாறியது. ஒரு பக்கம் சிரியா, ஈரான் ஆகிய நாடுகள் லெபனானின் ஒரு பகுதியை அதிபர் எமில் லாவுத் மூலம் ஆக்கிரமிக்க முயன்றது. இன்னொரு பக்கம் சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரபீக் ஹராரி மூலம் லெபனானை ஆக்கிரமிக்க முயன்றது. இதுதான் அங்கு நீண்ட மோதலுக்கு காரணமாக இருந்தது. இதில் இரண்டு பக்கமும் சில தீவிரவாத, புரட்சிகர அமைப்புகளும் இடம்பெற்று இருந்தது.
கொலை செய்யப்பட்டார்
இந்த நிலையில்தான் 2004ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகி ஒரே வருடத்தில் ரபீக் ஹராரி கொலை செய்யப்பட்டார். பிப்ரவரி 14ம் தேதி 2005ல்தான் இதே பெய்ரூட் போர்ட் அருகே வைத்து ரபீக் ஹராரி கொலை செய்யப்பட்டார். மொத்தம் 20 பேர் இதில் கொலை செய்யப்பட்டனர். பாராளுமன்றம் அருகே இருந்த காபி ஷாப்பில் இந்த கொலை நடந்தது. மிகப்பெரிய வெடி விபத்து மூலம் நடத்தப்பட்ட இந்த கொலை லெபனானை உலுக்கியது.
என்ன புரட்சி
அதன்பின் இந்த கொலை காரணமாக அங்கு மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் மக்கள் எல்லோரும் தெருவுக்கு வந்து போராட்டம் செய்தனர். இரண்டே வாரத்தில் லெபனானில் இருந்து சிரியா வெளியேறியது. இன்னொரு பக்கம் லெபனான் அரசும் சில வாரங்களில் கவிழ்ந்தது. லெபனான் அரசியல் புரட்சிக்கு ரபீக் ஹராரி கொலை வித்திட்டது. அதே சமயம் புதிய அரசு ரபீக் ஹராரி கொலையை தீவிரமாக விசாரித்தது.
தீர்ப்பு
ரபீக் ஹராரி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேர் குறித்த தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட உள்ளது. இதில் சிரியாவின் தொடர்பு என்ன என்பது குறித்தும் தீர்ப்பில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். சிரியா இதில் வசமாக உலக அரங்கில் சிக்குமென்று கூறுகிறார்கள். நாளை மறுநாள் தீர்ப்பு வர உள்ள நிலையில் இன்று அங்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் நீதிமன்றம், பாராளுமன்றம் , ரபீக் ஹராரி வீடு மூன்றுக்கும் அருகில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
நிறைய சந்தேகம்
இதனால் இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க, அல்லது மீண்டும் லெபனானில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆட்சியை கவிழ்க்க இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. லெபனான் அரசியலை எப்போதும் வெடிகுண்டு தாக்குதல்கள்தான் வடிவமைக்கும் என்று ஒரு கோரமான வாக்கியம் வழக்கத்தில் உண்டு.. அது ஏனோ இந்தமுறையும் நிரூபணம் ஆகியுள்ளது.. இந்த கொடூர வெடிப்பிற்கு காரணம் என்ன, அரசியல் பின்னணி, தீவிரவாத பின்ணணி இருக்கிறதா நேற்று தீவிரமான விசாரணைகள் தொடங்கி உள்ளது.