பிஜி தீவை புரட்டிப்போட்ட வின்ஸ்டன் புயல்: பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு
சுவா: பிஜி தீவை புயல் தாக்கியதால் இடுபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியை கடந்த சனிக்கிழமை வின்ஸ்டன் புயல் தாக்கியது. பல்வேறு குட்டித் தீவுகளை உள்ளடக்கிய பிஜியில் 9 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
வின்ஸ்டன் புயலால் பல்வேறு குட்டி குட்டித் தீவுகள் கடும் சேதம் அடைந்துள்ளன. பல தீவுகளில் கட்டிடங்கள் தரை மட்டம் ஆகியுள்ளன. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. அதில் 10 பேர் கோரோ தீவில் பலியாகியுள்ளனர்.
12 ஆயிரம் பேர் வசிக்கும் தவூனி தீவை மீட்பு குழுவினரால் நெருங்க முடியவில்லை. இதனால் அங்குள்ளவர்களின் நிலை பற்றி தெரியவில்லை. பிஜி வரலாற்றிலேயே இது தான் மோசமான புயல் ஆகும். இருப்பதிலேயே கோரோ தீவு தான் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 4 ஆயிரத்து 500 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயலால் பிஜி தீவில் உள்ள பல கிராமங்கள் மோசமாக சேதம் அடைந்துள்ளன. அந்த கிராமங்களில் உள்ள வீடுகள், பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மின் வயர்கள் அறுந்துள்ளதால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் பிஜிக்கு உதவ முன்வந்துள்ளன.