பணக்கார நாடுகளை ஆட்டிப்படைக்கும் முதுகுவலி.. இந்தியாவில் மன அழுத்தம் அதிகமாம்!
சியாட்டில்: உலகம் முழுவதும் எந்த நோய் அதிகம் உள்ளது என்று கேட்டால் பலரும் சர்க்கரை வியாதி, இதய நோய் உள்ளிட்டவற்றைக் கூறலாம். ஆனால் உண்மையில் முதுகு வலிதான் பெரும்பாலான நாடுகளில் பெரும் தலைவலியாக உள்ளதாக ஒரு ஆய்வுத் தகவல் கூறுகிறது.
அமெரிக்காவின் சியாட்டில் நகரைச் சேர்ந்த ஹெல்த் மெட்ரிக்ஸ் மற்றும் இவாலுவேஷன் கழகம் வெளியிட்ட 2013 நிலவர ஆரோக்கிய அறிக்கை இதைத்தான் காட்டுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு விதமான வியாதிகள் அதிகரித்துள்ளன. இதிலிருந்து தப்ப முடியாமல் மனிதகுலம் தவித்து வருகிறது. இந்த நிலையில் உடல் சார்ந்த, எலும்பு சார்ந்த நோய்களின் நிலவரம் குறித்த பட்டியலையும், புள்ளிவிவரத்தையும் இது வெளியிட்டுள்ளது.
முதுகுவலி...
மேலும் உலக அளவில் முதுகு வலிதான் அதிக அளவில் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட உலகின் முக்கால்வாசி நாடுகளில் முதுகுவலிதான் பெரிய அளவில் உள்ளது.
மன அழுத்தம்...
2வது இடம் டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தத்திற்குக் கிடைத்துள்ளது. மன அழுத்தத்தால் உலகின் பல நாடுகலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா...
இந்தியாவைப் பொறுத்தவரை முதுகு வலி பெரிய அளவில் இல்லை என்பது இதில் ஆறுதலான ஒன்றாகும். ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை மன அழுத்தம்தான் மிகப் பெரிய வியாதியாக உள்ளதாக இதில் காட்டப்பட்டிருப்பது கவலை தருவதாக உள்ளது.
இரும்புச் சத்துக் குறைபாடு...
இரும்புச் சத்து குறைபாடு 3வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இது அதிக அளவில் உள்ளது. அங்கு மன அழுத்தமும் பரவலாக உள்ளது.
எய்ட்ஸ்..
எச்ஐவி. இது நான்காவது இடத்தில் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில்தான் இது அதிகமாக உள்ளது.
சர்க்கரை வியாதி...
டயபடிஸ் எனப்படும் சர்க்கரை வியாதிக்கு அடுத்த இடம் கிடைத்துள்ளது. அரபு நாடுகளில் குறிப்பாக சவூதி அரேபியாவில் இது அதிகம் காணபப்டுகிறது. பிற வகை நோய்கள் அடுத்த இடத்தில் உள்ளன.
பணக்கார நாடுகளில்...
முதுகு வலி என்பது கிட்டத்தட்ட பணக்கார நாடுகளில்தான் அதிக அளவில் உள்ளது என்பது இங்கு கவனிப்புக்குரியதாகும். குறிப்பாக அமெரி்க்கா, போன்ற நாடுகளில் முதுகுவலிதான் பெரிய தலைவலியாக உள்ளது.
ஏழை நாடுகளில்...
வறுமை மற்றும் ஏழ்மையான நாடுகளில் மன அழுத்தம் அதிகமாக உள்ளது. இளைஞர்களிடம் இது அதிகமாக உள்ளது கவலை தருவதாக உள்ளது.
அனீமியா...
அனீமியா எனப்படும் ரத்த சோகை நோய் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் உள்ளது. இங்கு உணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.