தேர்வுக்கு டிமிக்கி கொடுக்க வெடிகுண்டு புரளியை கிளப்பிய ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் கைது
மசாசுசெட்ஸ்: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு புரளியைக் கிளப்பிய மாணவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மனோதத்துவப் படிப்பு படித்து வருபவர் எல்டோ கிம்(20). நேற்று முன்தினம் பல்கலைக்கழக இறுதி தேர்தவுகள் நடந்தன. இந்நிலையில் காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு கிம் இமெயில் அனுப்பினார். அதில் பல்கலைக்கழக வளாகத்தில் 4 இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். சயன்ஸ் சென்டர், சீவர் ஹால், எமர்சன் ஹால் மற்றும் தாயர் ஹாலில் குண்டுகள் இருப்பதாகவும் விரைவில் அவற்றை அகற்றாவிட்டால் வெடித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அந்த 4 கட்டிடங்களில் உள்ள மாணவ, மாணவியர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
விசாரணையில் கிம்மின் கம்ப்யூட்டிரில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிம்மை பிடித்து விசாரித்தபோது தேர்வில் இருந்து தப்பிக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கிம்மை கைது செய்தனர்.
அமெரிக்காவில் வெடிகுண்டு புரளியை கிளப்பினால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 கோடியே 54 லட்சத்து 70 ஆயிரத்து 411 அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில் கிம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.