விட மாட்டேன், இந்திய விசாவுக்கு தொடர்ந்து முயற்சிப்பேன்: 'சேனல் 4' கல்லம் மெக்ரே
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வீடியோ காட்சிகளாக வெளியிட்டு வருகிறார் கல்லம் மெக்ரே. டெல்லியிலும் தமது ஆவணப்படத்தை நாளை திரையிட அவர் திட்டமிடிருந்தார். ஆனால் இந்திய விசா அவருக்கு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கல்லம் மெக்ரே, இந்தியாவில் நவம்பர் 7-ந் தேதியன்று எனது ஆவணப்படத்தை வெளியிடுவதற்காக வர திட்டமிட்டிருந்தேன். இதுவரை எனக்கு விசா கிடைக்கவில்லை.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பே நான் விசா கோரி விண்ணப்பித்தேன். இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருக்கலாம் என்பதை நான் அறிவேன். கடந்த 3 ஆண்டுகாலமாக இது தொடர்பாக நாங்கள் திரட்டியிருக்கும் ஆவணபடங்களை வெளியிட ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் எனது பாஸ்போர்ட்டை கொடுத்திருந்தேன். விசா விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பலமுறை இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டேன். அங்குள்ள அதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
அத்துடன் இது தொடர்பாக இந்திய தூதரகத்துக்கு மின் அஞ்சல்களையும் அனுப்பியிருக்கிறேன். இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2 கடிதங்களையும் அனுப்பி வைத்திருக்கிறேன். நான் ஆவணப்படங்களை வெளியிடுவதை இலங்கை தடுக்க முயற்சித்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்கூட ஆவணப்பட திரையிடலுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்தது. மலேசிய அரசுக்கும் இலங்கை அழுத்தம் கொடுத்தது. இதனால் ஆவணப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்த மனித உரிமைகள் ஆர்வலர் லேனா ஹென்ட்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் இந்தியாவுக்கும் இலங்கை அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று விரும்புகிறேன். காமன்வெல்த் நாடுகளின் நெருக்கடியால் இலங்கை எனக்கு விசா தர வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் இந்திய விசாவுக்காக முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.