உலகக்கோப்பை முடிந்தும் ஓயாத சர்ச்சை.. கத்தாரில் 9 இந்தியர்கள் பலி! நிவாரணம் வழங்க பிபாவிடம் கோரிக்கை
தோஹா: பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடந்து முடிந்து இருக்கும் சூழலில், இந்த உலகக்கோப்பை தொடருக்கான உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் மரணம் தொடர்பான செய்திகள் தற்போது பூதாகரம் எடுத்து இருக்கின்றன.
இதுகுறித்து கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற்ற கத்தார், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது.
கடந்த 12 ஆண்டுகளில் இவ்வாறு பணியில் அமர்த்தப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக பன்னாட்டு ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும் தெரிவிக்கின்றன.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்
சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டெர்னேஷனல், 90% கூலித் தொழிலாளர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டார்கள். பலருக்கு முறையான ஊதியம் வழங்கப்பட்டதுடன் நீண்ட நேரம் பணியில் அமர்த்தப்பட்டதாகவும், ஸ்பான்சர்ஷிப் முறையால் வேலையையும், கத்தாரையும் விட்டுவிட்டு சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

தி கார்டியன் தகவல்
அதே நேரம் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விபரம் குறித்து மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 6,500 தெற்கு ஆசிய கூலித் தொழிலாளர்கள் கத்தாரில் உயிரிழந்து உள்ளதாக ஆங்கில செய்தித் தளமான கார்டியன் தெரிவித்தது. ஆனால், இந்த எண்ணிக்கை தவறானது என்றும், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிகைப்படுத்தப்பட்டது எனவும் கத்தார் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மைதான கட்டுமான தொழிலாளர்கள்
இதுவரை மைதான கட்டுமானப் பணியில் 37 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும், 12 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் தெரிவித்த கத்தார் அதிகாரிகள், இதில் 34 பேர் இந்த பணிகளின் காரணமாக இறக்கவில்லை என்றும் உடல்நல குறைபாடுகளின் காரணமாக இறந்ததாக தெரிவித்து இருக்கின்றனர்.

400-500 தொழிலாளர்கள்
சமீபத்தில் கத்தார் உலகக்கோப்பை தலைவர் ஹசன் அல் தவாதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 400 முதல் 500 தொழிலாளர்கள் இந்த தொடருக்கான கட்டுமானம் மற்றும் ஏற்பாட்டு பணிகளின்போது உயிரிழந்ததாக தெரிவித்து இருக்கிறார். ஆனால், இது தவறான தகவல் என்றும், உயிரிழப்புக்கான காரணம் என்ன என்று முழுமையாக தெரிவிக்கப்படவில்லை எனவும் விமர்சித்து உள்ளார் வளைகுடாவில் உயிரிழக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் நல அமைப்பான ஃபேர் ஸ்கொயரின் இயக்குநர் நிக் மெக்கீஹன்.

நிக் மெக்கீஹன்
20 வயதான தொழிலாளர்களும் இதில் இறந்திருப்பதாக கூறும் அவர், இவர்களும் இயற்கை மரணம் அடைந்தார்களா? அவர்களின் இறப்பு சான்றிதழில் அதை ஏன் குறிப்படவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். அதேபோல், மத காரணங்களுக்காக முறையாக பிரேத பரிசோதனை செய்து உயிரிழப்புக்கான காரணங்களை கண்டறியவில்லை என நிக் மெக்கீஹன் விமர்சித்து இருக்கிறார்.

9 இந்திய தொழிலாளர்கள்
இதில் குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 9 தொழிலாளர்களும் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பணி செய்யும் வயதுடையவர்கள் என்றும், ஆனால், அவர்கள் இயற்கையாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில் 3 பேர் 30 வயதுக்கும், 5 பேர் 50 வயதுக்கும் உட்பட்டவர்கள் ஆவர்.

உறவினர்கள் வேதனை
உயிரிழந்த இந்தியர்கள் உடல்நிலை குறித்து போதிய மருத்துவ தகவல்களும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறும் உறவினர்கள், நண்பர்கள் சொன்ன பிறகே 9 பேர் இறந்த தகவல் தங்களுக்கு தெரிந்ததாக கூறுகின்றனர். இதில் தெலுங்கானாவை சேர்ந்த 32 வயதான ஜெகன் சுருகந்தியின் தந்தை, தன்னுடைய மகன் முழு உடல் தகுதியுடன் இருந்ததாக கூறி உள்ளார். ஆனால், பெட்டியாக திரும்பி வந்ததாக தெரிவித்து உள்ளார்.

பிபாவிடம் முறையீடு
கத்தாரில் உயிரிழந்த தொழிலாளர்களுக்காக பிபாவிடம் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் கால்பந்து கழகங்கள் புகாரளித்து உள்ளன. நெதர்லாந்து அணியினர் கையில் பட்டயம் கட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் அமைப்பு 440 மில்லியன் அமெரிக்க டாலர்களை தொழிலாளர்களுக்காக வழங்க வேண்டும் என பிபாவிடம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் தாங்கள் பேசி வருவதாகவும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக பிபாவும் தெரிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications