காந்தி, புத்தர் பிறந்த மண்ணில் சகிப்புத்தன்மையற்ற சம்பவங்களை அனுமதிக்க மாட்டோம்: மோடி
லண்டன்: இந்தியாவில் நடைபெறும் ‘‘சகிப்பற்றதன்மையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்'' என்று லண்டனில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து, துருக்கி ஆகிய இரு நாடுகளில் 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
லண்டன் சென்றடைந்த அவரை ஹீத்ரோ விமான நிலையத்தில் இங்கிலாந்து அமைச்சர்கள் யூகோ சுவைர், பிரீத்தி பட்டேல், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ரஞ்சன் மத்தாய், இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பேவன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் பிரதமர் டேவிட் கேமரூனை சந்திப்பதற்காக இங்கிலாந்து நாட்டு அரசின் தலைமைச்செயலகம் சென்றார். அதன் அருகே மன்னர் சார்லஸ் வீதியில் அமைந்துள்ள ‘டிரசரி குவாட்ரங்கிள்' என்ற இடத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் பிரதமர் அலுவலகத்தில் தூதுக்குழுவினருடன் 90 நிமிடங்கள் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தையின் போது, இந்தியா-இங்கிலாந்து இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம், ராணுவம், கம்ப்யூட்டர் குற்றங்கள் தடுப்பு ஒத்துழைப்பு போன்றவை தொடர்பாக ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடியும், கேமரூனும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
பேட்டியின் பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இந்தியாவில் மனித உரிமைகளை மீறும் வகையில் நடைபெறும் சம்பவங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. சகிப்பற்றத்தன்மையுடன் நடைபெறும் சம்பவங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. அது ஓரிரு சம்பவங்களாக இருந்தாலும் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு சம்பவத்தையும் அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும்.
இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் உயிருக்கும், கருத்துகளுக்கும் அரசியல்சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. சகிப்பின்மையுடன் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சட்டம் கடுமையான நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் தொடரும். இந்தியா, காந்தியும், புத்தரும் பிறந்த மண். அங்கு அஹிம்சையும், சகிப்புத்தன்மையுமே ஆதாரம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications