துபாயில் நடந்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் "சங்கமிப்போம்" : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
துபாய்: அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் "சங்கமிப்போம்" என்கிற சங்கம விழா 12/02/2016 அன்று துபாய் அல் கிஸைஸ் கிரசென்ட் இங்கிலீஷ் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இவ்விழவில் பங்கேற்றனர்.
தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர்கள் முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி (கேரளா), முஹம்மது ஷாஃபி (ராஜஸ்தான்), எஸ்டிபிஐ தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் ஆகியோர் விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இரவு 7:30 மணிக்கு துவங்கிய இவ்விழாவுக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரகத் தலைவர் அலீயார் சாஹிப் அவர்கள் தலைமை தாங்கினார்.
விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. கணிதத்திலும், இன்னபிற துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பன்மொழிக் கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தமிழ், மலையாளம், கன்னடம், உருது மொழியில் பல சகோதரர்கள் பாடல்கள் பாடியும், கவிதை படித்தும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
முஹம்மது ஷாஃபி அவர்களுக்கும், முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி அவர்களுக்கும், நிஜாம் முஹைதீன் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முஹம்மது ஷாஃபி அவர்கள் தனது சிறப்புரையில், இந்திய தேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் நிலவி வரும் சகிப்பின்மையைப் பற்றி விவரித்து இதனை எதிர்த்து மக்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்தாக சிறப்புரையாற்றிய நிஜாம் முஹைதீன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முன்பும் பின்பும் இந்திய முஸ்லிம்களின் நிலையைச் சுட்டிக்காட்டி அதிகார சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகின்ற 4 மாநிலத் தேர்தல்களில் எஸ்டிபிஐ கட்சிக்கு முழு ஆதரவைத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய முஹ்யித்தீன் குட்டி ஃபைஸி அவர்கள் தனது சிறப்புரையில், வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களின் வளர்ச்சியைப் பற்றி கவனம் செலுத்தாமல் அம்பானிகள் மற்றும் அதானிகளின் வளர்ச்சிக்கு பாடுபடுவதை தோலுரித்துக் காட்டினார்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்கள் முறையே தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 3 மொழிகளில் முன்மொழியப்பட்டன. தமிழ் மாநிலத் தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் தமிழ் தீர்மானத்தை வாசித்தார்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தலித் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் கவலையளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக வன்முறை செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மத்திய அரசு மீது சந்தேகங்களை எழுப்புகிறது. ஆதலால் இது போன்ற செயல்களை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி வேண்டுகோள் விடுக்கின்றது.
2. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டையும் நீதியையும் விரைந்து வழங்கிட வேண்டும் என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கேட்டுக் கொள்கிறது.
3. இந்திய மக்கள் வருகின்ற 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக போன்ற மதவாத சக்திகளை ஜனநாயக உணர்வோடு புறந்தள்ள வேண்டும் என இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கேட்டுக் கொள்கிறது.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாநில மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தன்னார்வத் தொண்டர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.