இதுதான் கடைசி வீடியோ.. ஏதாவது ஆச்சுனா இந்திய அரசுதான் காரணம்.. உக்ரைனில் இந்திய மாணவர்கள் குமுறல்
கீவ் : உக்ரைனில் ரஷ்ய ராணுவம் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பல நாட்கள் காத்திருந்தோம் இனியும் முடியாது, இதுதான் எங்களின் கடைசி வீடியோ எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இந்திய அரசாங்கமும் தூதரகமும் தான் காரணம் என உக்ரைன் மேற்கு பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தேசியக் கொடியுடன் வெளியிட்ட வீடியோ பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஒன்பதாவது நாள் தாக்குதலை நேற்று தொடங்கிய நிலையில் பத்தாவது நாளான இன்று தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீழ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் பக்கம் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கப்பட்டது.

ரஷ்யா தாக்குதல்
வானுயர்ந்த கட்டடங்கள், ராணுவ மையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவும் வாகனங்கள் உதவியோடும் தொடர்ந்து வெளியேறி வரும் காட்சிகள் உலக அளவில் பேசு பொருளாக உள்ளது. இந்த தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்திய மாணவர்கள்தான். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்தவ மாணவர் நவீன் நேற்று முன்தினம் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக்க சிரமம்
இதனையடுத்து கார்கிவ் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இந்திய மாணவர்கள் அனைவரும் பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது.எனினும் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதில் இந்திய மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மாணவர்கள்
அத்துடன், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தது. தற்போதைய நிலவரப்படி சுமார் 11 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பலரும் மத்திய அரசின் உதவியோடு மீட்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் ஏராளமானோர் உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தவித்து வருவதாகவும் அவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
|
கடைசி வீடியோ
இந்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் தேசிய கொடியுடன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பல நாட்கள் காத்திருந்தோம் இனியும் முடியாது நாங்கள் உயிரை பணயம் வைத்து ரஷ்ய எல்லையை நோக்கி நகர்கிறோம் . எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இந்திய அரசாங்கமும் தூதரகம் தான் காரணம் என உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications