ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை மீட்டது ராணுவம்... ஈராக் பிரதமர் அறிவிப்பு
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை ஈராக் ராணுவம் நேற்று முற்றிலுமாக மீட்டது என அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல்-அபாதி தெரிவித்துள்ளார்.
மொசூல்: ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை ஈராக் ராணுவம் நேற்று முற்றிலுமாக மீட்டது என அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல்-அபாதி அறிவித்துள்ளார். மேலும் இதற்கு உதவிய அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைக்கு ஹைதர் அல் - அபாதி நன்றியும் தெரிவித்துள்ளார்.
ஈராக் நாட்டின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல், டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வரும் இந்த நகரை சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக் கொண்டனர்.
மேலும் மொசூல் நகரில் தங்களது இயக்கத்தினரை அதிக அளவில் குவித்தனர். சிரியாவின் சில பகுதிகளையும், ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய மொசூல் நகரையும் இணைத்து அதைத் தனி நாடாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது.
9 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்
இரு தரப்பினருக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்ததால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். மேலும் உச்சக்கட்ட போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
நாலாபுறமும் தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஈராக் ராணுவம் கூட்டுப் படையினரின் உதவியுடன் மொசூல் நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்தது. குறிப்பாக டைக்ரிஸ் நதியின் மேற்கு கரை பகுதியில் ராணுவம் படைகளை குவித்தது.
மக்களை மனிதக் கேடயங்களாக்கிய தீவிரவாதிகள்
தப்ப வழியின்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் நகர மக்களை, மனித கேடயங்களாக பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்டனர். இதனால் தீவிரவாதிகளை வேட்டையாடுவதில் ராணுவம் சற்று நிதானம் காட்டியது.
அல் நூரி மசூதி மீட்பு
குறுகிய தெருக்களையும், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியிலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மீட்டர் தூரம் என்ற அளவிற்கு முன்னேறி தாக்குதலை தொடர்ந்தது. அதே நேரம் தீவிரவாதிகள் தப்பித்து விடாதவாறு முற்றுகையையும் நீடித்தது. கடந்த வாரம் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பல நூற்றாண்டு பழமை வாய்ந்த அல் நூரி மசூதியை மீட்டது.
இடைவிடாத சண்டை
ராணுவத்தினரும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் வெடிக்கும் சத்தமும், எந்திர துப்பாக்கிகளால் சுடும் சத்தமும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதியின் வான்பரப்பில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து காணப்பட்டது.
தப்பியோடிய தீவிரவாதிகள்
மேலும், பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ராணுவம் அவர்களின் தாக்குதலை எளிதாக முறியடித்தது. ஏராளமான பயங்கரவாதிகள் ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தப்பி ஓடினர்.
மனித வெடிகுண்டாக மாறிய ஐஎஸ்ஐஎஸ்
சிலர் மட்டும் மனிதவெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தினர். ஆனால் ராணுவம் சாதுர்யமாக செயல்பட்டதால் அதற்கும் பலன் இல்லாமல் போனது. இறுதியில் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக் ராணுவம் முற்றிலுமாக மீட்டது.
ஈராக் பிரதமர் அறிவிப்பு
இந்த வெற்றியை நாட்டு மக்களிடம் அறிவித்த பிரதமர் ஹைதர் அல்-அபாதி, " ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மொசூல் நகரம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மொசூல் நகர புனரமைப்புக்கு ரூ. 6,500 கோடி
போரினால் சிக்கி பெரும் சேதத்துக்கு உள்ளான மொசூல் நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மட்டுமே 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.6,500 கோடி தேவைப்படும் என்று ஐ.நா.சபை கணக்கிட்டுள்ளது.