ஒரு ராக்கெட் வீசிய லெபனான், பதிலுக்கு 20 குண்டுகள் போட்ட இஸ்ரேல்
பெய்ருட்: இஸ்ரேல் மீது லெபனான் ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பதிலுக்கு இஸ்ரேல் லெபனான் மீது 20 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்க கடந்த 50 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் லெபனானில் உள்ள போராளிகள் குழு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. அதில் ஒரு ராக்கெட் இஸ்ரேலின் கலிலீ பகுதியில் விழுந்தது.
இதையடுத்து இஸ்ரேல் திங்கட்கிழமை மாலை லெபனானுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் தெற்கு லெபனானில் உள்ள வாதி அல் லிதானி பகுதியில் 20 குண்டுகளை வீசித் தாக்கியது.
லெபனான் இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்துவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. லெபனான் இஸ்ரேலை தாக்குவதும் இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. கடந்த ஜூலை மாதம் லெபனான் இஸ்ரேல் மீது 9 ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களை காஸா மீது பரிதாபப்பட்டு லெபனானில் உள்ள பாலஸ்தீன அமைப்பு நடத்தியது என்று லெபனான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.