மழைக்கு பயந்து மரத்தின் கீழ் ஒதுங்கிய மக்கள்.. இடி தாக்கி 6 பேர் பலி.. 11 பேர் காயம்!
உகாண்டா நாட்டில் இடி தாக்கி ஆறு பேர் பலியாகினர்.
கம்பாலா: உகாண்டா நாட்டில் இடி தாக்கி ஆறு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று தான் உகாண்டா. இந்நாட்டில் மழை காடுகள் மிக அதிகம். எனவே ஆண்டின் பெரும்பான்மை மாதங்கள் மழை பெய்யும்.
உகாண்டாவின் வடக்கு பகுதியில் உள்ள பதேர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. உடல் நலம் சரியில்லாத ஒருவருக்கு பிரார்த்தனை செய்த ஒரு கூட்டத்தினர் மழையில் நனையாமல் இருக்க ஒரு மரத்துக்கு அடியில் ஒதுங்கி நின்றனர்.
அப்போது திடீரென அங்கு மரம் மீது இடி விழுந்ததில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பதேர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உகாண்டா நாட்டில் இது போல் இடி தாக்கி மக்கள் இறப்பது வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்று தான். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கூட நான்கு விவசாயிகள் இடி தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.