ஈராக்கில் சதாம் ஆதரவுப் படையிடம் மேலும் ஒரு நகரம் வீழ்ந்தது!
மொசூல்: ஈராக்கில் சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் தல் அஃபார் என்ற மற்றொரு நகரமும் வீழ்ந்துள்ளது.
ஈராக்கில் ஷியா ஆட்சியாளர்களுக்கு எதிரான சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இந்த அமைப்பு அல்கொய்தாவுடன் தொடர்புடையது.

அத்துடன் தூக்கிலிடப்பட்ட ஈராக் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் இந்த அமைப்பில் இருக்கின்றனர். கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட ஈராக் ராணுவத்தை பல நகரங்களில் இருந்து விரட்டி அடித்துவிட்டது இந்த படை.
ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு அடுத்த 2வது பெரிய நகரமான மொசூலை கைப்பற்றிய கையோடு சுமார் 5 லட்சம் மக்களை வெளியேற்றியும் விட்டது ஐ.எஸ்.ஐ.எஸ். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தற்போது பாக்தாத் அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு நிலை கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மொசூல் அருகே உள்ள தல் அஃபார் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் மற்றொரு பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் நேற்று யுத்தத்தை தொடங்கினர். இந்த யுத்தம் இன்று வரை நீடித்தது. முடிவில் அந்நகரம் சதாம் ஆதரவுப் படை வசமானது.
இத்தகவலை அந்நகர மேயர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த நகரத்தில் சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications