2015ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக கொலம்பியா மாணவி தேர்வு!
மியாமி: 2015ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 22 வயதான கொலம்பியா நாட்டு அழகி பாலினா வேகா பட்டம் வென்றுள்ளார்.
முதல் ரன்னர் அப் ஆக அமெரிக்காவின் நியா சான்செஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது ரன்னர் அப் ஆக உக்ரைன் அழகி டயானா ஹர்ஷுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா உள்பட மொத்தம் 80 நாட்டு அழகிகள் இதில் கலந்து கொண்டனர். மியாமியில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
22 வயதான பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து வரும் பாலினா, கொலம்பியாவின் பாரன்குய்லா நகரைச் சேர்ந்தவர். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெருமை மற்றும் சந்தோஷத்துடன் சூடிக் கொள்வதாக கூறினார் பாலினா.
ஆரம்பத்திலிருந்தே வேகதான் வெல்வார் என்று பலரும் கட்டியம் கூறி வந்தனர். அதற்கேற்ப வேகா தலையில் மகுடம் வந்தமர்ந்து உள்ளது.
கடந்த முறை பட்டம் வென்ற வெனிசூலா நாட்டு அழகி கேப்ரியலா இஸ்லர், வேகாவுக்கு வெற்றி மகுடத்தை சூட்டினார். இருவருமே லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகா குடும்பத்துக்கு அழகிப் போட்டியும், பட்டமும் புதிதல்ல. அவரது பாட்டி எல்விரா காஸ்டில்லோ, 1953ம் ஆண்டு மிஸ் கொலம்பியா பட்டம் வென்றவராம்.
வெற்றி பெற்ற வேகாவுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகையுடன், நியூயார்க்கில் ஒரு ஆடம்பர வீடு, நிறைய நிறைய துணிமணிகள், அழகு சாதனப் பொருட்கள், ஒரு வருடம் நியூயார்க் திரைப்பட அகாடமியில் படிக்க உதவித் தொகை என பரிசுகள் அளிக்கப்படும்.