உங்க பேச்சு 'கா'.. ஜி20 மாநாட்டின்போது மோடியிடம் சீன அதிபர் பேசமாட்டாராம்
பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் சந்தித்து பேசுவதற்கு சூழ்நிலை சரியாக இல்லை என சீனா கூறி உள்ளது.
பீய்ஜிங்: இந்தியா சீனாவிடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் போது இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்து பேச சாத்தியங்கள் இல்லை என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியா- பூடான் - சீனாவின் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறிய நிலையில் இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் பெரும் ஆத்திரம் அடைந்துள்ள சீனா அடாவடியான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
இந்தியா தன்னுடைய படையை திரும்பப் பெற வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவோ அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. சிக்கிம் பகுதியில் இந்தியா அத்துமீறி வருவது குறித்து இஸ்ரேலில் உள்ள பிரதமரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி20 நாடுகள் பங்குபெறும் மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ள நிலையில் இருவரும் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கென் ஷூவாங்கிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.