மோடி தனது எல்லையை தாண்டிவிட்டார்.. சீறும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பலோசிஸ்தான் பற்றி பேசியதன் மூலம், தனது எல்லையை இந்தியா தாண்டிவிட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் இந்தியாவுக்கே சொந்தம் என பிரதமர் மோடி சமீபத்தில் கூறிய கருத்து பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நஃபீஸ் ஜகாரியா இன்று அளித்த பேட்டியொன்றில் பாகிஸ்தானின் கோபம் தெரிந்தது. அவர் கூறியுள்ளதாவது:
பலோசிஸ்தான் பற்றி பேசியதன்மூலம், ஐ.நா. நெறிமுறைகளை இந்தியா மீறியுள்ளது. மோடி தனது எல்லையை தாண்டி பேசியுள்ளார்.
காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தான் பேசும். இதை பேசும் சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இந்தியா நடத்திவரும் மனித உரிமை மீறல்களை மூடி மறைக்கவே அந்த நாடு பலோசிஸ்தான் விவகாரத்தை பேச ஆரம்பித்துள்ளது.
காஷ்மீரில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 100க்கும் மேற்பட்டவர்கள் பெல்லட் துப்பாக்கி சூட்டால் கண் பார்வையை இழந்துள்ளனர். இதை பாகிஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது. ஆம்னஸ்டி அமைப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதில் இருந்தே, இந்தியாவின் மனிதாபிமான விஷயத்தை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஜகாரியா தெரிவித்தார்.