பாகிஸ்தானின் கழுத்து நரம்பு போன்றது காஷ்மீர் ராணுவ தளபதி கொக்கரிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கழுத்து நரம்பை போன்றது காஷ்மீர் என்று அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷாரிப் கருத்து தெரிவித்தார்.
ராவல்பிண்டியில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில் உரையாற்றிய ராணுவ தளபதி ரஹீல் ஷாரிப் கூறியதாவது
காஷ்மீரில் வாழும் மக்களின் விருப்பத்துக்கு இணங்கவும், இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும் காஷ்மீர் பிரச்னை தீர்வு காணப்பட வேண்டும். பாகிஸ்தானின் கழுத்து நரம்பு போன்றது காஷ்மீர். அங்குள்ள மக்கள் செய்துள்ள தியாகங்கள் வீணாக போகாது.
பாகிஸ்தான் ராணுவம் அமைதியை விரும்பும் அதே நேரத்தில் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ளவும் தயாராக உள்ளது. ஜனநாயகத்தை பலப்படுத்துவது, அரசியலமைப்பு மர்றும் சட்டத்தை நிலைநாட்டுவதில் பாகிஸ்தான் ராணுவம் நம்பிக்கை கொண்டுள்ளது.
பத்திரிகை சுதந்திரத்திலும், அதன் பொறுப்புகள் மீதும் எங்களுக்கு மிகுந்த மதிப்புள்ளது.
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதத்தை வேரறுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் எடுக்கப்படும் எந்த ஒரு முயற்சிக்கும் ராணுவம் தனது முழு ஆதரவை அளிக்கும்.
தாய்நாட்டை பாதுகாக்க எப்போதும் ராணுவம் தயாராக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்திறன் பற்றி யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.
தேசத்துக்கு எதிரான கருத்துள்ளவர்கள் நிபந்தனையற்று நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட வேண்டும். அல்லது பொதுமக்களின் துணை கொண்டு அவர்கள் ஒடுக்கப்படுவார்கள்.
நரேந்திரமோடி இந்திய பிரதமரானால் இப்பிராந்தியத்தில் அமைதி குலையும் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் நேற்று எச்சரித்திருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற ஒராண்டு காலத்தில் முதன்முறையாக ரஹீல் ஷாரிப் இப்போதுதான் காஷ்மீர் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.