லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்க செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு பாக். அரசு அதிரடி தடை!!
இஸ்லாமாபாத்: லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட 3 தீவிரவாத இயக்கங்களின் செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் எலக்ட்ரானிக் மீடியா ரெகுலேட்டரி அத்தாரிட்டி எனப்படும் பெம்ரா அந்நாட்டு அனைத்து டி.வி. சேனல்கள், எஃப்.எம். வானொலிகளுக்கு நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா, ஃபாலே இ இன்சானியட் பவுண்டேசன் ஆகியவற்றின் செய்திகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜமாத் உத் தவா, ஃபாலே இ இன்சானியட் பவுண்டேசன் ஆகிய தீவிரவாத இயக்கங்கள் லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்புகள்தான் என்றும் பெம்ராவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி போது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்தது. இதன் பின்னர் ஜமாத் உத் தவா, ஃபாலே இ இன்சானியட் பவுண்டேசன் ஆகிய பெயர்களில் லஷ்கர் இயக்கம் இயங்கி வருகிறது.
இந்த லஷ்கர் இ தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீத் தான் 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.