கேரள கோவில் தீ விபத்து: பலியானவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் இரங்கல்
இஸ்லாமாபாத்: கேரள கோவில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவில், வானவேடிக்கையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் அதிகமான பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 200க்கும் அதிகமானவர்கள் திருவனந்தபுரம், கொல்லம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார் பிரதமர் மோடி. அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் நடந்த இந்த துயர சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கேரள கோவிலில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.