'சர்ச்சைக்குரிய நிபந்தனை..' ஆப்கனுக்கு உதவும் இந்தியா முயற்சிக்கு.. முட்டுக்கட்டை போடும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: ஆப்கனியர்களுக்கு உதவும் வகையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமை உள்ளிட்ட உதவி பொருட்களை இந்தியா அறிவித்திருந்த நிலையில், அது தனது நாட்டின் வழியே செல்ல பாகிஸ்தான் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்களால் கவிழ்க்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறியே உடன் தாலிபான்கள் விரைவாக ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும், அங்கு நிலவும் மோசமான நிலை தொடர்கிறது.
தாலிபான் ஆட்சி
அங்குள்ள பல்வேறு பகுதிகளிலும் உணவு பற்றாக்குறை நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விலைவாசி அனைத்தும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் பல நேரங்களில் வெறும் ஒரு வேலை உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின. இதுவரை தாலிபான்களின் ஆட்சியை இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் ஏற்கவில்லை.
இந்தியா அறிவிப்பு
இருப்பினும், தாலிபான்கள் ஆட்சியால் ஆப்கன் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் இந்தியா மனிதாபிமான உதவிகளை அறிவித்திருந்தது. அதன்படி 50,000 மெட்ரிக் டன் கோதுமை, மருந்து பொருட்கள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாகச் சாலை மார்க்கமாக இந்த உதவி பொருட்களை அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
பாக். அறிவித்த கட்டுப்பாடுகள்
இந்நிலையில், இந்த உதவி பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளைப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதில் இரண்டு நிபந்தனைகளை மிகவும் கவலைக்குரியவை என இந்திய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உதவி பொருட்களுக்குக் கூடுதல் கட்டணத்தை விதிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இருப்பினும், மனிதாபிமான உதவியாக இவை அனுப்பப்படுவதால் இதற்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என இந்தியா வலியுறுத்துகிறது.
சர்ச்சைக்குரிய நிபந்தனை
இதைவிட இன்னொரு சர்ச்சைக்குரிய நிபந்தனையையும் பாகிஸ்தான் விதிக்கிறது. அதாவது இந்தியா அனுப்பும் உதவி பொருட்கள் பாகிஸ்தான் லாரிகள் மூலமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்துகிறது. இதைக் கடுமையாக எதிர்க்கும் இந்தியா, குறைந்தது ஆப்கான் லாரிகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது கடந்த காலங்களிலும் இதுபோன்ற உதவி பொருட்களை இந்தியாவில் இருந்து ஆப்கன் லாரிகள் எடுத்துச் சென்றுள்ளன. ஆனால் இப்போது தான் பாக், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
Recommended Video
அடுத்து என்ன
முன்னதாக ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி விரும்புவதாக இந்தியா கடந்த அக். 7ஆம் தேதி அறிவித்திருந்தது. இருப்பினும், பாகிஸ்தானிடம் இருந்து இது தொடர்பாக உடனடியாக எவ்வித பதிலும் இல்லை. சுமார் 6 வாரங்களுக்குப் பிறகு கடந்த நவ. 24ஆம் தேதி தான் இதற்குப் பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்திருந்தது. குளிர் காலம் விரைவில் தொடங்கும் நிலையில், அதற்குள் உதவி பொருட்களை அனுப்ப வேண்டும் என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. இருப்பினும், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பாகிஸ்தான் இந்த நிபந்தனைகளை விதித்துள்ளன. இது தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதில் விரைவில் முடிவு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.