பனாமா பேப்பர்ஸ் வழக்கு: பிரதமர் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம்- பாக். உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
இஸ்லாமாபாத்: பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியில் நீடிக்க தகுதி இல்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம் தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியது. அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள், 500 இந்தியர்கள் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது.
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இந்த குழு விசாரணையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியாம் ஷெரீப், மருமகன் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப் உள்ளிட்டோரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
இந்த விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வெளியான தீர்ப்பில் நவாஷ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் நவாஷ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வார காலத்துக்குள் நவாஸ் ஷெரீப், அவரது குடும்பத்தினர் மீது வழ்ககுப் பதிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து இஸ்லாமாபத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.