சிட்னி முருகன் கோவிலில் 3 நாள் சைவ நெறி மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப வேண்டுகோள்!!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள முருகன் ஆலயத்தில் சைவ ஆகமங்கள், திருமுறைகள், சித்தாந்த நூல்கள் காட்டும் மனித நேயம் என்ற கருப்பொருளில் மூன்று நாட்கள் சைவநெறி மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டு மலருக்கான ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப வேண்டும் என்று சைவநெறி மாநாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சிட்னி சைவநெறி மாநாட்டுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆஸ்திரேலியா நாட்டின், சிட்னி மாநகரில், வைகாசிக் குன்றில் அமைந்துள்ள அருள்மிகு சிட்னி முருகன் ஆலய வளாகத்தில் திருவள்ளுவர் ஆண்டு 2045, ஆவணித் திங்கள் 13,14,15 ஆம் நாட்களில் (29.08.14, 30.08.14, 31.08.14, வெள்ளி, சனி, ஞாயிறு) சைவநெறி மாநாடு நடைபெற உள்ளது.
இம் மாநாட்டினை சிட்னி முருகன் ஆலய சைவ மன்றத்தினரும், உலக சைவப் பேரவையின் ஆஸ்திரேலியா கிளையின் உறுப்பினர்களும் சேர்ந்து நடத்துகின்றனர்.
சைவத்தையும், தமிழையும் ஆஸ்திரேலியா மண்ணில் வேரூன்றச் செய்யவேண்டும் என்பதே சிட்னி முருகன் ஆலய சைவ மன்றத்தினரின் முக்கிய குறிக்கோளாகும். இந்த அடிப்படையில் செயற்பட்டு வரும் சைவ மன்றம் சிட்னியில் இரண்டு சைவப் பாடசாலைகளை நடத்தி வருகின்றது. இந்த பாடசாலைகளிலும் பண்ணிசை வகுப்புகளும் நடாத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர தமிழர்கள் அதிகம் பகுதிகளில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் இந்து சமயம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இம் மாணவ, மாணவியர்கள் இலங்கையின் கொழும்பு விவேகானந்த சபையினரால் நடாத்தப்படும் சமய பாட தேர்வினை எழுதி வெற்றி பெற்று வருகின்றனர்.
அறிவுத்திறன் போட்டிகள்
ஆண்டுதோறும் இப் பகுதிகளில் வாழும் மாணவ, மாணவியர்களிடையே பண்ணிசைப் போட்டிகளையும், சமய அறிவுத்திறன் போட்டிகளையும் நடத்தி அவர்களின் சமய அறிவினை வளர்ப்பதோடு இளம் தலைமுறையினர் சைவநெறியினைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு ஆரோக்கியமான சூழலையும் சிட்னி முருகன் ஆலயத்தில் உருவாக்கி வருகின்றது.
முருகன் ஆலய விழாக்கள்
சிட்னி முருகன் ஆலயத்தில் நாயன்மார்களின் குருபூசைத் தினங்களும், சேக்கிழார் விழா, பண்ணிசை விழா, திருப்புகழ் விழா ஆகியனவும் சைவப் பாடசாலை மாணவ, மாணவியர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சைவநெறியின் சிறப்பு
இதன் வளர்ச்சியாக இவற்றிற்கு உரம் சேர்க்கும் வகையில் சைவநெறியின் சிறப்பை, உயர்வை, அறநெறியை, அன்புநெறியை, மானிட தர்மத்தை உலகெங்கிலும் பரந்து வாழும் சைவத் தமிழ் அறிஞர்களின், சான்றோர்களின் அனுபவம் வாய்ந்த எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலம் வெளிக்கொணரச் செய்து அவை மனித மேம்பாட்டிற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை ஆஸ்திரேலியா வாழ் தமிழ்ச் சமூகத்தினர் மனதில், குறிப்பாக இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்தல் வேண்டும். அவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் வேண்டும் என்பதே இம் மாநாட்டின் மிக முக்கிய குறிக்கோளாகும்.
சிறப்பு பூஜைகள்
சிட்னி முருகன் ஆலய வளாகத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் முதல் நாள் (29.08.14) நிகழ்வாக சிட்னி முருகன் ஆலயத்தில் சிறப்பு பூசைகளும், வழிபாடுகளும் நடைபெற்று பின்னர் சிட்னி முருகன் ஆலய கல்வி கலாசார மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
ஆய்வரங்கம் பயிலரங்கம்
30.08.14, 31.08.14 ஆகிய இரண்டு நாட்களும் சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகளும், மாலை ஆய்வரங்குகளும், இரவு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
23.08.14, 24.08.14, 06.09.14, 07.09.14 ஆகிய நாட்களில் சிறப்பு பயிலரங்குகளும் நடைபெறவுள்ளன.
ஆய்வுக்கட்டுரைகள்
இம் மாநாட்டில் வெளியிடப்படும் மலரில் பிரசுரிப்பதற்காக இலங்கை, இந்திய வாழ் அறிஞர்கள், சான்றோர்கள், பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள், பாடசாலை மாணவ, மாணவியர்கள் ஆகியோர்களிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்பு கொள்ள: [email protected]
தொலைபேசி இலக்கங்கள்:
ஒருங்கிணைப்பாளர்: திரு.மா.அருச்சுனமணி. 61+ 414537970
செயலாளர்: திரு.வை.ஈழலிங்கம்: 61+ 424698145
சைவ மன்ற தலைவர்: திரு.செ.தவபாலச்சந்திரன்: 61+ 419432903.
ஆய்வுக்கட்டுரைகள், கட்டுரைகள் ஆகியன அறிஞர்கள் குழுவினால் நன்கு பரிசீலிக்கப்பட்டுத் தரமானவை என்று கருதப்படுபவை மட்டுமே மலரில் பிரசுரிக்கப்படும்.
இவ்வாறு சிட்னி சைவ நெறி மாநாட்டுக் குழுவினர் தங்களது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.