ஒரே நொடி,அனைத்தும் காலி! மரியுபோல் தியேட்டர் மீது ரஷ்யாவின் ஷெல் தாக்குதல்! பரபர சாட்டிலைட் படங்கள்
கீவ்: உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மரியுபோல் நகரில் மக்கள் பதுங்கி இருந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இந்தப் போர் மூன்று வாரங்களைக் கடந்தும் 4ஆவது வாரமாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரஷ்யா ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் இந்தளவுக்குப் போராடுவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல பகுதிகளில் ரஷ்ய ராணுவம் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.

உக்ரைன் போர்
இதைப் போர் என்றே சொல்லக் கூடாது எனக் குறிப்பிடக் கூடாது என்று கூறும் ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடன் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரும் எனத் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தச் சூழலில் ரஷ்யா தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களைக் குறி வைத்தும் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பல பகுதிகளில் இரு நாட்டு ராணுவம் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா தாக்குதல்
அப்பாவி பொதுமக்களைக் குறி வைத்து, குடியிருப்பு கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக எழும் புகார்களை ரஷ்யா தொடர்ந்து மறுத்தே வருகிறது. ராணுவ தளங்களை மட்டுமே குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. குறிப்பாக மரியுபோல் நகர் மீது ரஷ்ய ராணுவம் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன், மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.

தியேட்டர்
போர் காரணமாக இந்த திரையரங்கில் தான் நூற்றுக் கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். இந்தச் சூழலில் தான் ரஷ்ய ராணுவம் இதன் மீது ஷெல் தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் திரையரங்கின் ஒரு பகுதி முற்றிலுமாக சிதிலமடைந்துவிட்டது. இந்தத் தாக்குதலில் பலர் மோசமாகக் காயமடைந்துள்ளனர். போரைக் கண்டு அஞ்சி மக்கள் பதுங்கி இருக்கும் திரையரங்கு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்ற ரீதியிலேயே கருத்து கூறி வருகிறது.

சாட்டிலைட் படங்கள்
இந்நிலையில், மரியுபோல் தியேட்டர் தாக்குதல் தொடர்பான சில சாட்டிலைட் படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் ரஷ்யாவின் தாக்குதலால் தியேட்டர் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பான அமெரிக்காவின் Maxar வெளியிட்டுள்ள சாட்டிலைட் படங்களில் கட்டிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்கச் சேதம் அடைந்துள்ளது. திரையரங்கின் மேற்கூரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதும் அதில் தெளிவாகத் தெரிகிறது.

உயிரிழப்பு இல்லை
தியேட்டருக்கு அடியில் இருந்த பங்கர் இந்தத் தாக்கத்தில் இருந்து தப்பியது. இதன் காரணமா நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. ராணுவ தளங்களை மட்டுமே குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா கூறி வரும் போதிலும், தியேட்டர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications