3 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் துபாயில் கஷ்டப்பட்ட இந்தியர்கள்: மேலாளரை தாக்கியதால் கைது
துபாய்: மூன்று மாதங்களாக சம்பளம் அளிக்காத துபாய் நிறுவனத்தின் மேலாளரை தாக்கிய 7 இந்திய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

துபாயிலுள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த சிலருக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று திடீரென அந்த அலுவலகத்தின் மேலாளரை இந்திய ஊழியர்கள் 7 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அலுவலக கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, அபுதாபியிலுள்ள குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் பெயர்களை ஜி.எஸ், பி.எஸ்,. எஸ்.எஸ், எம்.எஸ், பி.எஸ், எச்.ஒய், மற்றும் ஏ.ஒய் என்று காவல்துறை வெளியிட்டுள்ளது. முழுப்பெயர்களை வெளியிடவில்லை.
குற்றம்சாட்டப்பட்டதில் நான்குபேர், தாங்கள் குடிபோதையில் இருந்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால் இருவர் மட்டுமே மானேஜர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பிறர் தாக்குதல் நடத்தவில்லை என்றும் வாக்குமூலம் அளித்தனர். இம்மாதம் 9ம்தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications