30 ஆண்டுகளில் சிலிக்கான்வேலி செல்லும் முதல் இந்திய பிரதமர்.. கூகுள், பேஸ்புக் ஆபீசில் மோடி விசிட்
வாஷிங்டன்: 30 வருடங்களுக்கு பிறகு உலக தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகர் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியான சிலிக்கான்வேலிக்கு இந்திய பிரதமர் ஒருவர் விசிட் செல்ல உள்ளார். அவர் வேறு யாருமல்ல நரேந்திர மோடிதான்.
7 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி அயர்லாந்து மற்றும் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அயர்லாந்தில் சுற்றுப் பயணம் முடித்த அவர் செப்.24ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் சென்றடைந்தார்.
இன்று முன்னணி நிறுவன சி.இ.ஓக்களை சந்தித்த மோடி, நாளை அமெரிக்காவில் ஐடி தொழில்வளம் மிகுந்த, மேற்கு கடற்கரை பகுதியில் 2 நாள் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார். கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சிலிக்கான்வேலியில் கூகுள், பேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ, குவால்கம் உள்ளிட்ட பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் நேரில் செல்லும் மோடி, அந்த நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க அழைக்க உள்ளார்.
இதன்மூலம், 30 வருடங்களுக்கு பிறகு சிலிக்கான்வேலி செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். மோடியை வரவேற்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, வீடியோ மெசேஜ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மோடியின் பேச்சில் ஈர்க்கப்பட்டு, தொழில்துறையில் ஒரு பிரிவு இந்தியா இடம் பெயர்ந்துவிட கூடும் என்ற ஒரு அச்சமும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.