மண்ணிலே ஈரமுண்டு.. மகிழ்ச்சியில் துள்ளிய ஆப்கான் ஏழை சிறுமி! உலகை உணர்ச்சி பொங்க வைத்த வீடியோ
காபூல்: ஆப்கானிஸ்தான் வீதிகளில் பேனாக்களை விற்பனை செய்து வந்த ஏழை சிறுமியிடம் பெண் ஒருவர் அனைத்து பேனாக்களையும் வாங்கி அதற்கு அதிகமான பணத்தை கொடுத்ததால், அவர் மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு துள்ளி குதித்து ஓடும் உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பேனா வாங்கிய பெண்ணிடம் நீங்கள் அதிக பணம் தருகிறீர்கள் என்று சொன்ன அந்த சிறுமியின் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பரபரப்பான இந்த உலகத்தில் பெரும்பாலான மக்கள் சுயநலமாக சிந்திக்கின்றனர் என்ற பார்வை பரவலாக இருந்து வருகிறது. இதனாலேயே கருணை காட்டவும், உதவி செய்யவும் விரும்பும் பலர், அதை தவிர்த்து வருவதையும் பார்க்க முடிகிறது.
ஆனால் கருணையும், இரக்கமும் இன்னும் உலகில் உயிரோடுதான் உள்ளன. கருணை என்பது அவ்வளவு தனித்த குணம் அல்ல. எல்லோர் உள்ளத்திலும் ஏதோ ஒரு மூலையில் கருணையும், இரக்கமும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், அதை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
தாலிபான்கள் ரொம்ப மோசம்! இரவில் தூக்கமின்றி தவிப்போம்! ஆப்கானிஸ்தான் பற்றி விவரித்த சீக்கிய பெண்
கருணை என்னும் குணம்
இந்த தயக்கத்தை கடந்து மீன் தொட்டியிலிருந்து துள்ளிக்கொண்டு வெளியில் விழும் மீனைபோல் கருணை என்பது மனித உள்ளத்தில் இருந்து வெளிப்பட்டு விடுகிறது. ஒருவர் காட்டும் கருணையும், அதனால் பயனடையும் நபர் வெளிப்படுத்தும் உணர்வையும் பார்க்கையில் ஒரு இனம் புரியாத உணர்வு நமக்குள் ஏற்படும்.
ஆப்கானிஸ்தான் சிறுமி
அப்படிதான் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணின் உதவியும், அதனால் பயனடைந்த ஏழை சிறுமியின் சிரிப்பும் உலக மக்களை கவர்ந்து உள்ளது. போர்கள், படையெடுப்புகள், தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், உயிரிழப்புகள், இரத்த சிதறல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை கழித்து வந்த ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக தாக்குதல் சம்பவங்கள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
சாலையில் பேனா விற்பனை
ஆனால், போர்களால் ஏராளமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பள்ளி செல்லும் வயதுடைய ஒரு சிறுமி, தலைநகர் காபூலின் சாலைகளில் பேனாக்களை விற்பனை செய்து வந்து உள்ளார். நமது சென்னையிலும் இதுபோன்ற காட்சிகளை அடிக்கடி காண முடியும்.
பெண் வழக்கறிஞர்
அப்போது அவ்வழியாக காரில் சென்ற நாஹிரா ஜியா என்ற வழக்கறிஞர் அந்த சிறுமியை பார்த்து பேசினார். அந்த கலந்துரையாடலை பார்ப்போம்.
வழக்கறிஞர்: உங்கள் பெயர் என்ன?
சிறுமி: ஜெய்னப்
வழக்கறிஞர்: நீங்கள் எதை விற்பனை செய்கிறீர்கள்?
சிறுமி: பேனாக்களை விற்கிறேன்.
வழக்கறிஞர்: இந்த பேனாக்களை என்ன விலைக்கு விற்பனை செய்கிறீர்கள்?
சிறுமி: ஒரு பேனா 20 செண்ட்
வழக்கறிஞர்: நான் இந்த பேனாக்கள் அனைத்தையும் வாங்கினால் நீ மகிழ்ச்சியாக இருப்பாயா?
சிறுமி: (சிரித்துக்கொண்டே) ஆம்..
(உடனே அந்த பெண் வழக்கறிஞர் ஒரு நாணய நோட்டை எடுத்து சிறுமியிடம் கொடுக்கிறார்)
சிறுமி: நீங்கள் அதிக பணத்தை கொடுக்கிறீர்கள்
வழக்கறிஞர்: இது என்னுடைய ஆதரவாளர்கள் வழங்கும் அன்பளிப்பு (என்று கூறி மேலும் 3 நாணய நோட்டுக்களை கொடுக்கிறார்)
வழக்கறிஞர்: இனிமையாவளே.. நேராக வீட்டுக்கு சென்று உங்கள் அம்மாவிடம் இதை கொடுக்க வேண்டும். (என்று சொன்னவுடன் அந்த சிறுமி சிரித்துக்கொண்டே டாட்டா காட்டிவிட்டு துள்ளி குதித்து அங்கிருந்து மகிழ்ச்சியாக ஓடினார்)
|
டிரெண்டாகும் வீடியோ
இந்த வீடியோவை நாஹிரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது பலரது வரவேற்பை பெற்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ பார்த்ததும் தங்கள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என பலர் கருத்திட்டு உள்ளனர். அதே நேரம் அந்த சிறுமியை வீடியோ எடுத்து பதிவிட்டதற்காக சிலர் ஆட்சேபனையும் தெரிவித்து உள்ளார்கள்.