தீயாகப் பரவும் உருமாறிய கொரோனா... பெரும் அச்சத்தில் உலக நாடுகள்
மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் நால்வருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்தப் புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஒரு வைரஸ் தன்னைத் தானே இது போல மாற்றிக்கொள்வது இயல்பான ஒன்றுதான் என்றும் தடுப்பு மருந்துகளிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வைரஸ் இவ்வாறு செய்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியாவில், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டிலும் இந்தப் புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நால்வருக்கு இந்தப் புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா தாக்கியதா, இல்லையா.. எப்படி கண்டுபிடிப்பது.. 7 அறிகுறிகள் இருக்குதாம்!
அவர்கள் நால்வருமே சமீபத்தில்தான் பிரிட்டன் நாட்டிலிருந்து திரும்பியவர்கள் என்றும் ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாட்ரிட் பிராந்தியத்தின் துணை சுகாதாரத் தலைவர் அன்டோனியோ சபாடெரோ கூறுகையில், "இவர்களின் கொரோனா பாதிப்பு தீவிரமாக இல்லை. இந்த உருமாறிய கொரோனா வேகமாகப் பரவக்கூடியது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இது நோயின் தீவிர தன்மையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
மேலும் மூன்று பேருக்கு இந்த உருமாறிய கொரோனா தொற்று இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் அவர்களின் பரிசோதனை முடிவுகள் செவ்வாய் அல்லது புதன்கிழமை மட்டுமே கிடைக்கும். மக்கள் இதன் காரணமாக அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.
உருமாறிய கொரோனா அச்சம் காரணமாக இந்தியா, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. அதேபோல ஸ்பெயினும் தன் நாட்டுக் குடிமக்கள் தவிர மற்றவர்கள் பிரிட்டனிலிருந்து வர தடை விதித்துள்ளது.