கார் எஞ்சினுக்குப் பின்னால் பதுங்கிப் படுத்தபடி ஸ்பெயினுக்கு அகதியாக வந்த கினியா இளைஞர்!
மேட்ரிட்: ஆப்ரிக்காவில் இருந்து ஓடும் கார் எஞ்சினில் பதுங்கி ஸ்பெயினுக்கு ஊடுருவிய வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகியவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் உயிரைப் பணயம் வைத்து உரிய அனுமதியின்றி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.
அவ்வகையில், ஹங்கேரி நாட்டின் வழியாக கடந்த வாரம் ஒரு சரக்கு லாரிக்குள் மறைந்தபடி ஆஸ்திரியா நாட்டுக்குள் நுழைய முயன்ற 71 பேர் அந்த லாரிக்குள் மூச்சுத்திணறி பிணமாக கிடந்து கண்டுபிடிக்கப்பட்டனர்.
அதிகாரிகளால் கைது:
இந்த செய்தி அளித்த அதிர்ச்சியில் இருந்து பலர் இன்னும் மீளாமல் உள்ள நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் இருந்து ஓடும் காரின் எஞ்சின் பகுதிக்குள் பதுங்கியபடி ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற ஒரு வாலிபரை அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போலீசார் சோதனை:
மொராக்கோ நாட்டு எல்லை வழியாக வந்து கொண்டிருந்த வாகனங்களை ஸ்பெயின் நாட்டு எல்லைப் பகுதியான குவெட்டா பகுதியில் குடியுரிமைத்துறை அதிகாரிகளும், போலீசாரும் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
மயங்கிய நிலையில் வாலிபர்:
அப்போது, சந்தேகத்துக்குரிய ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது, பொருட்களை வைக்கும் காரின் பின்பகுதியில் கினியா நாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் மறைந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அதே காரின் எஞ்சின் அமைந்திருக்கும் பானெட் பகுதியை திறந்துப் பார்த்தபோது, மயங்கிய நிலையில் ஒரு வாலிபர் படுத்துக் கிடப்பதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை:
கார் எஞ்சினுக்குள் இருந்து வெளியாகும் பெட்ரோல் எரியும் நெடி மற்றும் உச்சகட்ட அனலை தாங்கிக்கொண்டு அவர் எப்படி உயிரோடு இருந்தார் என்பதை கண்டு வியந்த அவர்கள், அந்த வாலிபரை கைது செய்து, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கடலில் மூழ்கி உயிரிழப்பு:
இதேபோல், நைஜீரியாவை சேர்ந்த சிலர் ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்பி அவ்வப்போது கள்ளத்தனமாக படகுகளில் செல்வதும், அவர்களில் சரிபாதி பேர் விபத்துகளில் சிக்கி, கடல் நீரில் மூழ்கி உயிரிழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.