காதும் காதும் வைத்தது போன்று ரஷ்யா சென்று புதினுக்கு நன்றி சொன்ன சிரியா அதிபர்
மாஸ்கோ: ராணுவ உதவி செய்து வரும் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் மாஸ்கோ சென்றுள்ளார்.
சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வருமாறு அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து ரஷ்ய அதிபர் புதின் தனது ராணுவ படையை சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் 49 இடங்களை தாக்கியதாக ரஷ்யா பெருமையாக தெரிவித்துள்ளது. கடந்த 3 வாரங்களாக ரஷ்யா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் புதினுக்கு நேரில் நன்றி தெரிவிக்க ஆசாத் நேற்று மாலை மாஸ்கோ சென்றுள்ளார். ஆசாத் மாஸ்கோ வந்த விஷயத்தை ரஷ்ய அரசு இன்று காலை வரை வெளியே தெரிவிக்கவில்லை. மேலும் ஆசாத் கிளம்பிவிட்டாரா இல்லை மாஸ்கோவில் தான் உள்ளாரா என்ற விபரமும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு சிரியாவில் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு தற்போது தான் ஆசாத் முதல்முறையாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். சிரியா அரசுக்கு ஈரானும் ஆதரவளித்து வரும் நிலையில் அவர் அந்நாட்டை விட்டுவிட்டு ரஷ்யா சென்றுள்ளது அவருக்கு புதின் தான் முக்கியம் என்பதை தெரிவிக்கிறது என கூறப்படுகிறது.