சீனாவுடனான தகவல் தொடர்பு துண்டிப்பு... அமெரிக்காவில் ஏவுகணை சோதனை நடத்துகிறது தைவான் !
தைபே: தைவானுடனான தகவல் தொடர்பை சீனா முறித்துக்கொண்டுள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை சமாளிக்க அமெரிக்காவில் முதல் முறையாக ஏவுகணை சோதனையை தைவான் அடுத்த மாதம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும், அதைத் தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாகத்தான் சீனா பார்க்கிறது. தைவானில் கடந்த மாதம் முதல் பெண் அதிபராக சாய் இங்க் வென் பதவி ஏற்றார். அவர் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த சீனாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சீனா தன் போக்கை மாற்றிக்கொள்ள வில்லை. இதையடுத்து தைவானுடனான தகவல் தொடர்பை சீனா முறித்துக்கொண்டதாக அறிவித்தது.

இந்த நிலையில் இதனிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை சமாளிக்க அமெரிக்காவில் முதல்முறையாக ஏவுகணை சோதனையை தைவான் அடுத்த மாதம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூமெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சேண்ட்ஸ் ஏவுதளத்தில் இருந்து அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட பி.ஏ.சி-3 ஏவுகணை சோதிக்கப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த ஏவுகணையை சோதிக்க சென்ற ஆண்டு அமெரிக்கா ஒப்புதலளித்தது.
இதற்கு முன்பாக 1990-களில் 3 பி.ஏ.சி.-2 ஏவுகணைகளை தைவான் அமெரிக்காவிடம் இருந்து வாங்கியிருந்தது. அது தைபேயிலும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனா தைவானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக 1,500 ஏவுகணைகளை நிலைநிறுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications