800 ஆண்டுகள் பழமையான மொசூல் பெரிய மசூதியை வெடி வைத்து தகர்த்தது ஐஎஸ்ஐஎஸ்... ஈராக் குற்றச்சாட்டு
ஈராக் மொசூல் நகர பெரிய மசூதியை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்தான் வெடி வைத்துத் தகர்த்தனர் என்று ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி தெரிவித்துள்ளார்.
பாக்தாத்: ஈராக் நாட்டின் பெரிய மசூதியை வெடிவைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தகர்த்து விட்டனர் என்று அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி கூறியுள்ளார். மேலும், அந்த மசூதி தகர்ப்பின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான பெரிய மசூதியில்தான், ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி, கடந்த 2014ம் ஆண்டு தனது இஸ்லாமிய ராஜ்யத்தை அறிவித்தார்.
இப்போது அவர்களே அதை தகர்த்துள்ளனர். ஆனால் மசூதியை அமெரிக்க விமானம்தான் தகர்த்தது என ஐஎஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியுள்ளது.
800 ஆண்டுகால மொசூல் நகர பெரிய மசூதியை ஐஎஸ்ஐஎஎஸ் அமைப்பினர் தர்த்துவிட்டனர். அவர்கள் வரலாற்று பிழையை செய்துவிட்டனர். அந்த மசூதியில் இருந்து 50 மீட்டர் தொலைவிலேதான் நாங்கள் இருந்தோம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்தான் மசூதியை தகர்த்தனர் என்று ஈராக் ராணுவமும் கூறியுள்ளது.
ஐஎஸ் அமைப்பு மொசூல் மற்றும் ஈராக்கின் பெரும் பொக்கிஷங்களில் ஒன்றை தகர்த்துவிட்டது என்று ஈராக்கில் உள்ள, மூத்த அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார். மொசூல் நகர பெரிய மசூதி 1172ம் ஆண்டில் துருக்கி நாட்டு அரசர் நினைவாக கட்டப்பட்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.