சிரியா எல்லையில் துருக்கிக்குள் நுழைந்த ரஷ்யா போர்விமானத்தால் பதற்றம்!!
அங்காரா: சிரியா எல்லையில் துருக்கி நாட்டுக்குள் ரஷ்யா போர்விமானம் சில நிமிடங்கள் பறந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னிய நாட்டு விமானங்கள் அத்துமீறி பறந்தால் துருக்கி சுட்டு வீழ்த்தலாம் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்யா வான்தாக்குதலை நடத்தி வருகிறது. ஆசாத்தை எதிர்க்கும் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சிக் குழுவான ப்ரீ சிரியா ஆர்மியை இலக்கு வைத்தே ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. ஐ.எஸ். இயக்கத் தீவிரவாதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டு கிளர்ச்சி குழு மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என அமெரிக்கா கூறி வருகிறது.
ஆனால் ரஷ்யாவோ, அதிபர் ஆசாத்தை யார் எதிர்த்தாலும் பயங்கரவாதிகளே எனத் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் துருக்கி எல்லையில் கிளர்ச்சி குழு மீது தாக்குதல் நடத்துவதற்காக புறப்பட்டு சென்ற ரஷ்யா போர் விமானங்கள் சிறிது தொலைவு துருக்கி வான்பரப்புக்குள் நுழைந்துவிட்டது.
இதனால் துருக்கி எச்சரிக்கை விடுத்தது. இதன்பின்னர் மோசமான வானிலையில் தவறுதலாக துருக்கி எல்லைக்குள் நுழைந்ததாக ரஷ்யாவும் அறிவித்தது. இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பு. மேலும் ரஷ்யா தமது வான்வழித் தாக்குதல் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவும், துருக்கி வான்பரப்பில் அத்துமீறி பறக்கும் அன்னிய நாட்டு விமானங்களை சுட்டு தள்ள துருக்கி அரசுக்கு உரிமை உண்டு என்று ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா, தவறுதலாக நுழைந்துவிட்டதாக தெரிவித்திருப்பதால் எந்த பதற்றமும் இல்லை என துருக்கி கூறியுள்ளது.
இதனிடையே ரஷ்யா, ஆசாத் எதிர்ப்பு கிளர்ச்சி குழுக்களுக்கு எதிராக தரைவழித் தாக்குதலை நடத்தவும் முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான ஈரான் ராணுவத்தினர் சிரியா எல்லையை சென்றடைந்துள்ளனர். இதனால் ரஷ்யா- ஈரான் கூட்டாக இணைந்து அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி குழுக்களுக்கு எதிராக தரைவழித் தாக்குதலை விரைவில் மேற்கொள்ளக் கூடும் எனவும் கூறப்படுகிறது.