உக்ரைனுக்கு ரஷ்ய புரட்சிப் படையின் "பக்" ஏவுணை தளங்களைக் காட்டிக் கொடுக்க அமெரிக்கா முடிவு?
வாஷிங்டன்: ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் பக் ஏவுகணைகளை வைத்துள்ள இடங்கள், ஏவுமிடங்கள் உள்ளிட்ட தகவல்களை உக்ரைனுக்குத் தர அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தத் தகவல்களை அமெரிக்க உளவுத்துறையினரும், பென்டகனும் அமெரிக்க அரசிடம் வழங்கியுள்ளனவாம். இந்தத் தகவல்களை உக்ரைனுக்குக் கொடுப்பதன் மூலம், புரட்சிப் படையினரின் தாக்குதலுக்கு முன்பாகவே அவற்றைத் தாக்கி அழிக்கும் வாய்ப்பு உக்ரைனுக்குக் கிடைக்கும்.
மேலும் குத்துமதிப்பாக தாக்குதல் நடத்துவதை விட்டு வி்ட்டு துல்லியமாகவும் தாக்குதல் நடத்த முடியும். எனவே இந்த போட்டுக் கொடுக்கும் வேலையை அமெரிக்கா செய்யத் திட்டமிட்டுள்ளதாம்.
ஆனால் ரஷ்யா இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கும் என்று தெரிகிறது. மேலும் பதில் நடவடிக்கையிலும் ரஷ்யா இறங்கலாம் என்றும் தெரிகிறது.

ஒபாமா ஒப்புக் கொள்வாரா
இருப்பினும் இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்னும் முடிவெடுக்கவில்லையாம். ஏற்கனவே உக்ரைன் விஷயத்தில் அமெரிக்க உளவுத்துறை அடக்கமாகவே இருக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இப்படி ஒரு போட்டுக் கொடுத்தல் வேலையைச் செய்ய அவர் உத்தரவிடுவாரா என்பது தெரியவில்லை.

ரஷ்யா மோதலில் குதிக்கலாம்
ஒருவேளை புரட்சிப் படையினரின் முக்கிய தாக்குதல் கருவிகள், இடங்கள் உள்ளிட்டவை குறித்த துப்புக்களை அமெரிக்கா உக்ரைனுக்குக் கொடுத்தால், மோதல் மேலும் தீவிரமடையும் என்று தெரிகிறது. அதேசமயம் ரஷ்யாவும் கூட நேரடியாக களத்தில் குதிக்கும் அபாயமும் உள்ளது.

திணறி வரும் உக்ரைன்
ஏற்கனவே ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினரை சமாளிக்க முடியாமல் உக்ரைன் திணறி வருகிறது. ரஷ்யாவின் ஆதரவு அதிகமாக இருப்பதால் புரட்சிப் படையினரை ஒடுக்க உக்ரைனால் முடியவில்லை.

அதி பயங்கர பக் ஏவுகணைகள்
தற்போது புரட்சிப் படையினரின் அதி பயங்கர ஆயுதமாக ரஷ்யா வழங்கியுள்ள பக் ஏவுகணைகள்தான் உள்ளன. கடந்த 10 நாட்களில் மட்டும் இது 5 விமானங்களை வீழ்த்தியுள்ளது. அதில் ஒன்றுதான் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம். உண்மையில் இந்த விமானத்தை புரட்சிப் படையினர் வீ்ழ்த்திய பின்னர்தான் பக் ஏவுகணையின் அபாயம் குறித்து உலகத்தில் பலருக்கும் தெரிய வந்தது.

ஆயுதங்கள் அதிக அளவில்
தற்போது ரஷ்யாவிலிருந்து புரட்சிப் படையினருக்கு அதிக அளவில் ஆயுதங்கள் போயுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே வரும் நாட்களில் உக்ரைன் ராணுவத்திற்கும், புரட்சிப் படையினருக்குமான மோதல் மேலும் உக்கிரமடையும் வாய்ப்புகள் உள்ளன.

படை நடமாட்டம்
ஏற்கனவே புரட்சிப் படையினரின் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்த செயற்கைக் கோள் படங்களை அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. ஆனால் பக் ஏவுகணைகள் குறித்த தகவலை அது வழங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications