சிட்னி பீதியால் தப்பி ஓடியவர்களிடம் காசு பறித்து பெயர் நாறியதால் ப்ரீ சவாரி அறிவித்த உபேர்!
சிட்னி: சிட்னியில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் லின்ட் கபே ஹோட்டல் பகுதியில் இருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களுக்கு இலவச சவாரி அளிக்கப்படும் என்று உபேர் டாக்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லின்ட் கபே என்னும் ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அதை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். ஹோட்டலுக்குள் இருந்த சுமார் 50 பேரை பிணையக் கைதிகளாக வைத்துள்ளனர். அதில் முதலில் 3 பேரும் அதன் பிறகு 2 பேரும் ஹோட்டலில் இருந்து தப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் ஹோட்டலை கைப்பற்றியவுடன் அது இருக்கும் சிட்னி மத்திய பிசினஸ் மாவட்டத்தில் இருந்து தப்பியோடிய மக்களிடம் 4 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது உபேர் நிறுவனம். தீவிரவாதிகள் இருக்கும் பகுதியில் இருந்து செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூல் செய்தது.
நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி அதிக கட்டணம் வசூலிக்கிறது உபேர் என்று பலரும் விமர்சனம் செய்தனர். இதையடுத்து உபேர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தீவிரவாதிகள் இருக்கும் பகுதியில் இருந்து செல்லவிரும்பும் மக்களை அவர்களின் வீடுகளுக்கு இலவசமாக பத்திரமாக அழைத்துச் செல்வோம். மேலும் முன்னதாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டவர்களிடம் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து அந்நிறுவன டாக்சிகளுக்கு மாநில அரசு தடை விதித்தது. மேலும் சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறி தாய்லாந்து அரசும் உபேர் டாக்சிகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் தான் இருக்கும் நல்ல பெயரையாவது காப்பாற்ற இலவச சவாரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது உபேர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications